என் வாழ்வில் இதுபோன்ற தவறைச் செய்யமாட்டேன் என்று சிதம்பரம் அருகே பட்டியல் இன பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அவமரியாதை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நடிகர் சதீஷ் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவரான பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தரையில் அமர வைக்கப்பட்ட புகைப்படம் அக்டோபர் 9-ம் தேதி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகப் பரவியது. தமிழக அரசியல் கட்சிகள் இந்தச் சம்பவத்துக்குத் தங்களுடைய கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றன.
இந்நிலையில் என் வாழ்வில் இதுபோன்ற தவறைச் செய்யமாட்டேன் என்று இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சதீஷ் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சாதியைக் காட்டி ஒரு ஊராட்சித் தலைவரையே நாற்காலி தராமல் தரையில் அமரவைத்த அவலம்…. கண்டிக்கத்தக்க கொடூரச் செயல். என்னால் சமூகத்தை மாற்ற முடியுமோ இல்லையோ… நான் என் வாழ்வில் இத்தவறைச் செய்யமாட்டேன். தனி மனித ஒழுக்கத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும். #அனைவரும்சமம்” என்று தெரிவித்துள்ளார்.