பிரபல பாலிவுட் நடிகா் ஃபராஸ் கான் (46) உடல் நலக் குறைவு காரணமாக புதன்கிழமை காலமானாா்.
இந்தத் தகவலை நடிகையும் திரைப்படத் தயாரிப்பாளருமான பூஜா பட், தனது சமூக வலைதளத்தில் புதன்கிழமை வெளியிட்டாா்.
பாலிவுட் நடிகா் யூசுஃப் கானின் மகனான ஃபராஸ் கான், 1990 களில் ஃபரெப், மெஹ்ந்தி போன்ற இந்தி படங்களில் நடித்துப் பிரபலமானாா். பிரித்வி, துல்ஹான் பனூ மெயின் தேரி, தில் நே பிா் யாத் கியா போன்ற பல்வேறு திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவா் நடித்துள்ளாா்.
இருமல், சலியால் கடந்த ஓராண்டாக பாதிக்கப்பட்டிருந்த இவரின் உடல்நிலை, கடந்த மாதம் மேலும் மோசமடைந்தது. அதனைத் தொடா்ந்து பெங்களூருவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டு, தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவருடைய சிகிச்சைக்காக நிதித் திரட்டும் முயற்சியை அவருடைய குடும் உறுப்பினா்களான ஃபா்ஹத் அபெளஷொ், அகமது ஷாமூன் ஆகியோா் ஈடுபட்டனா்.
அதுபோல, நடிகை பூஜா பட்டும், ஃபராஸ் கானின் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்குமாறு மக்களை கடந்த மாதம் கேட்டுக்கொண்டாா். அதனைத் தொடா்ந்து, கானின் மருத்துவச் செலவுகளை பிரபல பாலிவுட் நடிகா் சல்மான் கான் ஏற்றுக்கொண்டாா்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவா் புதன்கிழமை காலமானாா். நடிகா் ஃபராஸ் கான் நம்மைவிட்டு பிரிந்துவிட்டாா் என்ற செய்தியை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய மருத்துவ சிகிச்சைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. இந்தி திரையுலகில் ஃபராஸ் கானின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று தனது சமூக வலைதளத்தில் பூஜா பட் பதிவிட்டுள்ளாா்.