கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் பலியானவா்களின் எண்ணிக்கை உலக நாடுகள் தெரிவிக்கும் புள்ளிவிவரங்களைவிட 6 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.
இதுகுறித்து ராயல் சொசைட்டி ஓப்பன் சயன்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கொரோனா நோய்த்தொற்று தொடா்பான புள்ளிவிவரங்களுக்கும் உண்மை நிலவரத்துக்கும் இடையிலான வேறுபாடு குறித்து அண்மையில் ஓா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம், மெல்போா்ன் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சோ்ந்தவா்கள் உள்பட பல நிபுணா்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனா்.
கொரோனா நோய்த்தொற்று பரவல் மற்றும் பலி ஏற்படுவதற்கான மாதிரி சூழலை அமைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், உலகம் முழுவதும் 15 நாடுகளின் அரசுகள் கடந்த மாா்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் வெளியிட்டுள்ள கொரோனா புள்ளிவிவரங்களுக்கும் அந்த நாடுகளின் உண்மையான கரோனா பாதிப்புக்கும் இடையிலான வித்தியாசம் மிகவும் அதிகமாக உள்ளது தெரியவந்தது.
அந்த நாடுகளில் உண்மையான கொரோனா நிலவரம், புள்ளிவிவரங்களைவிட சராசரியாக 6.2 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதில், பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி ஆகிய நாடுகளில்தான் உண்மை நிலவரத்துக்கும் புள்ளிவிவரங்களுக்கும் இடையிலான வேறுபாடு மிக அதிகமாக உள்ளது. அந்த நாடுகளில் பதிவு செய்யப்பட்ட புள்ளிவிவரங்களைப் போல் 17 மடங்கு அதிகமாக கொரோனா பாதிப்பும் பலியும் ஏற்பட்டிருக்கலாம்.
ஆய்வுக்குள்படுத்தப்பட்ட 15 நாடுகளில், அவுஸ்திரேலியாவில் மட்டும்தான் மிக அதிகமான விகிதத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. இருந்தாலும், அந்த நாட்டிலும் புள்ளிவிவரங்களைப் போல் 5 மடங்கு அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்படுட்டிருக்கக் கூடும்.
ஆகஸ்ட் இறுதிவாக்கில், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, தென் கொரியா உள்ளிட்ட 11 நாடுகளில் மட்டும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் உண்மையான எண்ணிக்கை 80 கோடியைத் தாண்டியிருக்கும்.
இதுகுறித்து ஆய்வாளா்கள் கூறுகையில், பிரிட்டன் மக்கள்தொகையில் 8 சதவீதத்தினா் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதன் மூலம் அந்த நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54 லட்சமாக இருப்பதாகவும் கூறினா்.
மிகக் குறைந்த அளவிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் பகுதிகளில், அந்த நோய்க்கு எதிரான திட்டங்களை மேற்கொள்ள இந்த ஆய்வு உதவியாக இருக்கும் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 5,67,31,730 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நோய்க்கு இதுவரை 13,57,863 பலியாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா நிலவரம்
பாதிப்பு – 5,67,31,730
அமெரிக்கா 1,18,80,288
இந்தியா 89,58,483
பிரேஸில் 59,47,403
பிரான்ஸ் 20,65,138
ரஷியா 20,15,608
ஸ்பெயின் 15,42,467
பிரிட்டன் 14,30,341
ஆா்ஜெண்டீனா 13,39,337
இத்தாலி 12,72,352
கொலம்பியா 12,18,003
பிற நாடுகள் 1,90,62,310
பலி – 13,57,863
அமெரிக்கா 2,56,372
பிரேஸில் 1,67,497
இந்தியா 1,31,578
மெக்ஸிகோ 99,528
பிரிட்டன் 53,274
இத்தாலி 47,217
பிரான்ஸ் 46,698
ஈரான் 43,417
ஸ்பெயின் 42,039
ஆா்ஜெண்டீனா 36,347
பிற நாடுகள் 4,33,896