நமது உடல் சீராக இயங்குவதற்கு சமமான அளவிலான ஊட்டச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவை. அளவுக்கு அதிகமாக உண்டாலும் சரி அல்லது தேவைக்கு குறைவாக உண்டாலும் சரி அது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.
ஒரு குறிப்பிட்ட அளவிலான கொழுப்பு நமது உடலுக்குத் தேவைப்படுகிறது. நமது மூளைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு கொழுப்பு தேவைப்படுவது போல், நமது நரம்புகளுக்கு நரம்பு செல்கள் தேவைப்படுவது போல் நமது உடலுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு கொழுப்பு தேவை.
எனினும் கொழுப்பின் அளவு தேவைக்கு அதிகமாக உயரும் போது அது நமது இரத்தம் ஓடும் பாதைகளில் தேங்கிவிடுகிறது. அப்போது இரத்த பரிசோதனை செய்து பார்த்தால் உயர் கொழுப்பு இருப்பது தெரியவரும். பொதுவாக 1 டெசி லிட்டர் இரத்தத்தில் 180 மில்லி கிராமுக்கும் குறைவாக கொழுப்பின் அளவு இருக்க வேண்டும்.
நாம் உணவு அருந்தும் போது, நமது உடலில் இரண்டு வழிகளில் கொழுப்பு உற்பத்தியாகிறது. முதலாவது நமது உடலுக்குள் நடக்கும் இயக்கத்தின் மூலம் உடலில் கொழுப்பு உற்பத்தியாகிறது. இரண்டாவதாக நாம் உண்ணும் உணவின் மூலம் கொழுப்பு உற்பத்தியாகிறது. எனினும் உயர் கொழுப்பு என்பது நமது உடலில் உள்ள மொத்த கொழுப்பின் அளவை வைத்து அல்ல மாறாக கொழுப்பின் அடர்த்தியை வைத்து தீர்மானிக்கப்படுகிறது.
குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு, மிகவும் குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு மற்றும் உயர் அடர்த்தி கொண்ட கொழுப்பு என்று மூன்று பிரிவுகள் இருக்கின்றன. இந்த மூன்று வகை கொழுப்பும் நமது உடலில் இருக்கக்கூடியது. உயர் கொழுப்பு ஏற்படுவதற்கு எவையெல்லாம் காரணமாக இருக்கின்றன என்பதைக் கீழே பார்க்கலாம்.
முதலாவதாக நமது மரபணுக்கள் மற்றும் பரம்பரை ஆகியவை உயர் கொழுப்புக்கு முதல் காரணமாக இருக்கின்றன. இது குடும்ப உயர் கொழுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலான சோதனை முடிவுகள் என்ன சொல்கிறது என்றால் உடலுக்குள் நடக்கும் இயக்கம் அல்லது மரபியல் காரணங்களினால் தான் உயர் கொழுப்பு ஏற்படுகிறது. அதனால் நமது உணவில் உள்ள கொழுப்பின் அளவை குறைப்பதால் இந்த குடும்ப உயர் கொழுப்பு குறைவதில்லை.
புகைப்பிடித்தல் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பெருமளவில் தீங்கு இழைக்கிறது. சுவாச நோய்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலான நோய்கள் ஏற்படுவதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ புகைப்பிடித்தல் காரணமாக இருக்கிறது. தீங்கிழைக்கும் நச்சுத்துகள்களை நமது உடலில் பெருமளவில் உற்பத்தி செய்கிறது. அதனால் புகைப்பிடிக்கும் பழக்கம் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது. ஆகவே உயர் கொழுப்பு பிரச்சினையினால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக புகைப்பிடிக்கக்கூடாது.
மது அருந்தும் பழக்கமும் உயர் கொழுப்புக்கு காரணமாக இருக்கிறது. நமது கல்லீரல் குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பினை பெறும் அளவை மது அருந்தும் பழக்கம் குறைக்கிறது. அதோடு அதிகமாக மது அருந்தும் போது அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு மட்டும் அல்லாமல் உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் அதிகரிக்கிறது.
நாம் உண்ணும் உணவும் நமது உடலில் கொழுப்பு அதிகமாவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. ஒருவருக்கு உயர் கொழுப்பு பிரச்சனை இருக்கிறது என்றால் அவர் ஒரு முறையான உணவுப் பழக்கைத்தை கடைபிடிக்க வேண்டும். ஒருவர் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவை மட்டும் அல்லாமல் கெட்ட கொழுப்பு அதிகமுள்ள உணவையும் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே கொழுப்பு சத்து அதிகம் உள்ள மற்றும் கெட்ட கொழுப்பு அதிகமுள்ள எண்ணெயில் பொறித்த உணவுகள், சிவப்பு இறைச்சி போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.
நமக்குள் நீண்ட காலமாக அழுத்தம் இருந்தால், அது நமது உடல் இயக்கத்தை பாதிக்கும். மேலும் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கும். பொதுவாக அலுவலகம் செல்பவர்களுக்கு அழுத்தம், கவலை மற்றும் மனச்சோர்வு ஆகியவை அதிகமாக இருக்கும். அழுத்தமானது உடலுக்கு எதிர்மறையான பாதிப்பையே அதிகம் ஏற்படுத்துவதாக பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதோடு அழுத்தம் உடலில் பல பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. எதிர்வினை ஆற்றுவது என்பது உடலின் இயல்பு. ஆகவே அழுத்தம் அதிகம் ஆகும் போது நமது உடலின் எதிர்வினையும் அதிகமாக இருக்கும்.
நமது உடல் சீராக இயங்குவதற்கு நடைபயிற்சி, ஓடுதல், நீந்துதல் மற்றும் நடனம் போன்ற உடற்பயிற்சிகள் மிகவும் முக்கியம். நமது உடலில் உள்ள உயர் கொழுப்பை குறைப்பதற்கு இந்த உடற்பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. அதிலும் உயர் கொழுப்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், அதை குறைப்பதற்காக தினமும் தவறாமல் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.