சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வீரகனூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சொக்கனூர் செல்லும் வழியில் இருபுறமும் கோழிக் கழிவுகளை அப்பகுதியில் கோழிக் கடை நடத்தி வருபவர்கள் சிலர் தினந்தோறும் அப்பகுதி முழுவதிலும் கொட்டி அசுத்தம் செய்து வருகின்றனர்.
கொட்டப்படும் பகுதியானது சுடுகாடு மற்றும் இடுகாடு பகுதியாகும். இப்பகுதியில் தான் இறந்தவர்களின் இறுதிச்சடங்குகள் மற்றும் வருடாந்திர திதி, தர்ப்பணம் செய்து வருகின்றனர். அங்கே அருகில் பலநூறு வருடங்களாக மக்களுக்கு நிழல் தரக்கூடிய பழமைவாய்ந்த அரச மரமானது உள்ளது.
இப்பகுதியில் உள்ளவர்கள் மதிய நேரங்களில் இங்கு நிழலுக்காக பலபேர் வந்து ஓய்வு எடுத்து செல்கின்றனர். இந்த வழியில்தான் சுவேத நதியின் அணை கட்டானது இருக்கிறது. இப்பகுதியின் வழியாக செல்பவர்கள், கோழிக்கழிவுகளை முகச்சுளிப்புடன் பார்த்து செல்கின்றனர். இப்பகுதியில் கோழி கழிவுகள் கொட்டி அதனை குழியில் கூட மூடாமல் அப்படியே விட்டுச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக வந்து அதனைத் தோண்டி அசுத்தம் செய்கின்றது.
தற்போது மழைக்காலம் என்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வீரகனூர் பேரூராட்சி நிர்வாகம் கழிவுகளை கொட்டுபவர்களிடம் அறிவுரை வழங்கி, கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தை சுத்தம் செய்து, அந்த இடத்தில் பசுமை சார்ந்த மரம் நட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.