கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ள விஸ்ட்ரோன் கம்பெனி எனப்படும் ஐஃபோன் தயாரிப்பு தொழிற்சாலையை, அதன் ஊழியர்களே அடித்து நொறுக்கியுள்ளனர்.
பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் ஊதியத்தைத் தராத ஆத்திரத்தில், தொழிற்சாலையின் நாற்காலிகள், கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் என அனைத்தையும் ஊழியர்கள் அடித்து நொறுக்கினர்.
நிறுவனத்துக்கு சொந்தமான வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டது. ஒரு அறையில் தீ வைக்கப்பட்டு, உடனடியாக அது காவல்துறையினரால் அணைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தொழிற்சாலை நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் தங்களுக்கு ஊதியம் கிடைக்காவிட்டால், அங்குள்ள தொழிலாளர் துறையிடம் புகார் அளித்திருக்கலாம், அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டிருக்கலாம். ஆனால் தங்கள் எங்கு வேலை செய்தோமே, அந்த இடத்தை அடித்து நொறுக்குவது சரியல்ல என்று கோலார் காவல்துறை துணை ஆணையர் சத்தியபாமா தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ஊதியத்தை முறையாக வழங்காத விஸ்ட்ரோன் நிறுவனத்துக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.