தமிழ்நாடு மற்றும் சிஎஸ்கே அணிகளின் முன்னாள் வீரரான யோ மகேஷ் (33), அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
50 முதல்தர ஆட்டங்களில் விளையாடி 108 விக்கெட்டுகளை எடுத்துள்ள வேகப்பந்து வீச்சாளரான யோ மகேஷ், ஐபிஎல் போட்டியில் 18 ஆட்டங்களில் விளையாடி 21 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஐபிஎல் தொடங்கிய 2008-ல் தில்லி அணிக்காக விளையாடி 11 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அந்த வருடம் தில்லி அணியில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் யோ மகேஷ் தான். பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தேர்வாகி 5 ஆட்டங்களில் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
காயம் காரணமாக சில வருடங்கள் விளையாடாமல் இருந்தார். லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு ஐந்து வருடங்கள் கழித்து 2017-ல் தமிழக ரஞ்சி அணியில் இடம்பெற்றார். மும்பைக்கு எதிராக யோ மகேஷ் சதமடித்ததை யாராலும் மறக்க முடியாது. மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 374 ரன்கள் எடுத்தது. தமிழக அணி, 339 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தனி ஆளாகப் போராடி சதமடித்தார் யோ மகேஷ். 450 ரன்களுடன் தமிழக அணி முன்னிலை பெற உதவினார்.
இந்தியா யு-19, இந்திய ஏ அணிகளில் விளையாடியுள்ளார். தமிழக அணிக்காகக் கடைசியாக செப்டம்பர் 2018-ல் அஸ்ஸாம் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் விளையாடினார். டின்பிஎல் போட்டியில் கடந்த வருடம் விளையாடினார்.