தமிழகத்தில் முன்கூட்டியே சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என இந்தியத் தேர்தல் ஆணைய தலைமை செயலர் உமேஷ் சின்ஹா தெரிவித்தார்.
தமிழகத்தில் 16 ஆவது சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலுக்கான பூா்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து, சென்னையில் இரண்டாவது நாளாக இந்தியத் தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினா்.
திங்கள்கிழமை தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகளுடன் முதலில் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் செவ்வாய்க்கிழமை இந்தியத் தோ்தல் ஆணையத்தின் பிரதான செயலாளா் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஆலோசனை முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்ஹா, தமிழகத்தில் வாக்காளர் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய முகாம்கள் நடத்தப்பட்டது. கரோனா சூழல் மத்தியில் பிகார் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். வாக்குச்சாவடி முகாம்களில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகப் பின்பற்றப்படும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்குமேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு செலுத்த வசதி செய்து தரப்படும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வுதளம், கழிவறை, மருத்துவ வசதி செய்து தரப்படும். விருப்பப்படும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு வசதியைப் பயன்படுத்தலாம். ஆகிய அறிவிப்புகளையும் உமேஷ் சின்ஹா வெளியிட்டார்.
மேலும் தமிழகத் தேர்தலின் ஏற்படக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விவாதித்ததாகத் தெரிவித்த சின்ஹா பெரும்பாலான கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தக் கோரியுள்ளன எனவும் அரசியல் கட்சிகளின் விருப்பப்படி மரபுப் படி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என உமேஷ் சின்ஹா விளக்கமளித்தார்.
தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பரிசுப்பொருள் விநியோகம், பணப்பட்டுவாடா ஆகிய விதிமுறைகளை ஆணையம் தீவிரமாகக் கண்காணிக்கும். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவினங்கள் கண்காணிக்கப்படும். 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றுபவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவர். 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்கிற வகையில் வாக்குச்சாவடிகள அமைக்கப்படும் என உமேஷ் சின்ஹா தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த குறுந்தகடு மற்றும் புத்தகம் ஆகியவற்றை இந்திய தலைமை தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்ஹா வெளியிட்டார்.