அதிவேகமாகப் பரவும் ஆற்றல் கொண்ட புதிய வகை கரோனா தீநுண்மி, இந்தியாவுக்குள் ஊடுருவினால் அதன் பாதிப்பு விகிதம் தற்போது இருப்பதைக் காட்டிலும் 10 மடங்கு உயரக் கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அதன்படி புதிய வகை தீநுண்மியால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து சராசரியாக 8 முதல் 10 பேர் வரை நோய்த்தொற்று பரவலாம் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அந்த நிலையைத் தவிர்க்க நோய்த் தடுப்பு விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்றுவது மட்டுமே ஒரே வழி என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் தடம் பதித்த கரோனா தொற்றுக்கு இதுவரை 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை கடுமையாக பரவி வந்த நோய்த்தொற்று, அண்மைக் காலமாக கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இது அச்சத்தில் உறைந்திருந்த மக்களுக்கு சற்று ஆறுதலையும், நம்பிக்கையையும் அளித்திருந்தது.
ஆனால், அதனைத் தகர்க்கும் வகையில் அமைந்துள்ளது தற்போது பிரிட்டன் நாட்டின் நிலவி வரும் அசாதாரண சூழல். வீரியமிக்க புதிய வகை கரோனா தீநுண்மி (வைரஸ்) அங்கு கண்டறியப்பட்டதுடன், அதனால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது உள்ள கரோனா தொற்றைக் காட்டிலும் 70 சதவீதம் வேகமாக பரவக் கூடிய ஆற்றல் வாய்ந்ததாக அந்த தீநுண்மி உருவெடுத்துள்ளது.
இதற்கிடையே, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அண்மையில் பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியதும், அதில் சிலருக்கு கரோனா அறிகுறிகள் இருப்பதும் மக்களிடையே பயத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
பொதுவாகவே பாக்டீரியாவைக் காட்டிலும் தீநுண்மிகள் அதிக அளவு பல்கிப் பெருகும். ஒரு தீநுண்மி மூலம் நூறு தீநுண்மிகள் உருவாகும். ஆனால், அவை அனைத்தும் ஒரே குணாதசியங்களுடன் இருப்பதில்லை. தன்னைத் தானே வலிமையாக தகவமைத்துக் கொள்ள அவற்றில் ஏதேனும் ஒரு தீநுண்மி புதிய தன்மையுடன் வித்தியாசமாக உருவாகிவிடுகிறது. அவ்வாறு உருவாகும் புதிய தீநுண்மிகள் மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்திய பிறகே அதன் தன்மை குறித்தும், வீரியம் குறித்தும் நமக்குத் தெரிய வரும். அத்தகைய நிலைதான் தற்போது பிரிட்டனிலும், ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்பட்டிருக்கிறது.
21 வகையான தீநுண்மிகள் உருவாக்கம்: அவ்வாறு கரோனாவிலிருந்து புதிதாக 21 வகையான தீநுண்மிகள் உருவாகியிருப்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ உலகுக்கே புது சவால்களை உருவாக்கியிருக்கும் அந்த தீநுண்மிகள் குறித்து நோய்த்தொற்று தடுப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் சுரேஷ்குமார் கூறியதாவது:
கரோனா தீநுண்மியிலிருந்து சற்று மாறுபட்ட புதிய தீநுண்மிகள் இப்போது கண்டறியப்பட்டுள்ளன. அதில், ஆறுதலான விஷயம் என்னவென்றால், அந்த தீநுண்மிகளின் வெளிப்புறப் புரதம் மட்டுமே மாறியுள்ளது. மாறாக அதன் மரபணுவில் எந்த வேறுபாடும் காணப்படவில்லை. அதனால் தற்போதுள்ள சிகிச்சை முறைகளே புதிய பாதிப்புக்கும் பலனளிக்கும்.
ஒரு தீநுண்மியின் வெளிப்புறத்தில் இருக்கும் புரதம்தான் உடலுக்குள் ஊடுருவக் கூடிய தன்மை கொண்டவை. புதிதாக உருவாகியுள்ள கரோனா தீநுண்மியைப் பொருத்தவரை அதன் புரதம் வீரியமடைந்திருப்பதால், அது விரைவில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ளது.
தற்போதுள்ள கரோனா தீநுண்மியானது ஒருவரிடமிருந்து பிறருக்கு பரவுவதற்கான வாய்ப்பு 10 முதல் 20 சதவீதம் வரை மட்டுமே. அதேவேளையில், புதிய வகை கரோனா தீநுண்மியில் அந்த விகிதம் 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் அதீத எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். பிரிட்டன் போன்ற நாடுகளிலேயே புதிய வகை கரோனா பரவும் வேகம் அதிகமாக இருக்கும் போது மக்கள்தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் அதன் தாக்கம் கற்பனையில் நினைத்துப் பார்க்க இயலாத அளவு இருக்கும்.
தற்போது பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட உள்ள தடுப்பூசிகளே புதிய வகை கரோனா தொற்றையும் தடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது எந்த அளவுக்கு உண்மை, புதிய வகை தீநுண்மியால் நேரிடும் உயிரிழப்புகள் எத்தனை என்பதற்கு விரைவில் விடை தெரியும் என்றார் அவர்.
விதியை மறந்தால் மாறும் விதி
அரசு வகுத்துள்ள நோய்த் தடுப்பு விதிகளைப் பின்பற்றினால் மட்டுமே புதிய வகை தீநுண்மியால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, முகக் கவசம் அணியவேண்டும், தனி நபர் இடைவெளி தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அண்மைக் காலமாக பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் பலர் செல்வதைக் காணமுடிகிறது. அதேபோன்று தனி நபர் இடைவெளியும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலை நீடிக்கும் நிலையில் ஒருவேளை புதிய தீநுண்மி ஊடுருவினால் அதைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
எதிர்கொள்ளத் தயார்
புதிய வகை கரோனா பாதிப்பு தமிழகத்தில் வந்தாலும், அதனை எதிர்கொள்ளத் தேவையான கட்டமைப்பும், முன்னேற்பாடுகளும் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
புதிதாக கரோனா தொற்று எந்தெந்த பகுதிகளில் அதிகமாக பரவுகிறதோ, அவை அனைத்தும் கண்டறியப்பட்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாது, பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் பணிகளிலும் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய வகை கரோனா பரவலைக் கையாளும் வகையிலும், அதனைக் கட்டுப்படுத்தும் வகையிலும் தமிழக சுகாதாரத் துறையின் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. தனி நபர் சுகாதாரத்தைப் பேணுவதன் மூலமாக எந்த தொற்றையும் கட்டுப்படுத்த இயலும் என்றார் அவர்.
கபசுரக் குடிநீர் பலனளிக்குமா?
சுவாசப் பாதையின் வாயிலாக ஊடுருவக் கூடிய தன்மை கொண்டது கரோனா தீநுண்மி. தற்போது உள்ள தீநுண்மியானது மூக்கு, வாய், கண் வழியே தொண்டைப் பகுதிக்குள் ஊடுருவினாலும் அது பல மடங்கு பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது சிலருக்கு மட்டும்தான். கபசுரக் குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகளின் பலனால் பலருக்கு நோய்க் கிருமி உள்ளே செல்லாமல் தடுக்கப்படுகிறது.
மேலும், புதிய வகை கரோனா தொற்று வீரியமிக்கது என்பதால், அதை முழுமையாகத் தடுக்கும் ஆற்றல் கபசுரக் குடிநீருக்கு இல்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், அதனுடன், பிற நோய் எதிர்ப்பு மருந்துகளை உட்கொண்டால் அவை பலனளிக்கக் கூடும் என்றும் கூறியுள்ளனர்.