சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக சக நடிகை சரண்யா, ஹோட்டல் ஊழியர், பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் என ஏழு பேரிடம் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ திங்கள்கிழமை விசாரணை நடத்தினார்.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பு பூந்தமல்லி அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சித்ராவின் தந்தை காமராஜ் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்அடிப்படையில், அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்தை போலீஸார் கடந்த வாரம் திங்கள்கிழமை இரவு கைது செய்து, பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ஹேம்நாத்தும் சித்ராவும் ஏற்கெனவே பதிவுத் திருமணம் செய்து கொண்டதால் சித்ராவின் மரணம் குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, கோட்டாட்சியர் அலுவலகத்தில் சித்ராவின் தந்தை காமராஜ், தாயார் விஜயா, அக்கா சரஸ்வதி, அண்ணன் சரவணன் ஆகியோரிடம் கடந்த வாரம் திங்கள்கிழமையும், ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், தாயார் வசந்தா ஆகியோரிடம் கடந்த செவ்வாய்க்கிழமையும், ஹேம்நாத்திடம் வியாழக்கிழமையும் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், சித்ரா மரணம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ திங்கள்கிழமை மீண்டும் விசாரணை நடத்தினார். சித்ராவின் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் 5 பேர், சக நடிகை சரண்யா, ஹோட்டல் ஊழியர் ஒருவர் என மொத்தம் 7 பேரிடம் அவர் விசாரணை மேற்கொண்டார்.