சுமார் இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த துரித பானம் மற்றும் உணவகம் இத்தாலியின் பொம்பேயி நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெசுவிஸ் சிகரத்தில் ஏற்பட்ட எரிமலைச் சீற்றத்தின் காரணமாக வெளியான எரிமலைக் குழம்பில் சிக்கி கி.பி. 79-ஆம் ஆண்டில் இத்தாலியின் பொம்பேயி நகரம் அழிந்துபோனது.
அப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் செய்து வரும் தொல்பொருள் ஆராய்ச்சியில், பானங்கள் மற்றும் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் ஒரு துரித உணவகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடையில் மிகப்பெரிய குடுவைகள் ஒன்றோடு ஒன்று இணைத்து சுடுமண்ணால் கட்டமைக்கப்பட்டு, அதில் பானங்களும், உணவுப் பொருள்களும் நிரப்பப்பட்டு, அந்த கடையின் வெளிப்பகுதியில் மக்கள் அமர்ந்து அல்லது நின்றவாறு உணவருந்தும் நடைமுறை இருந்திருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.
இதுபோன்று சுடச்சுட உணவுப் பொருள்களை வழங்கும் உணவகக் கட்டமைப்புகளை தெர்மோபோலியா என்று கூறுகிறார்கள். அந்த வகையில் பொம்பேயி நகரத்தில் மட்டும் சுமார் 80 தெர்மோபோலியா கட்டமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அங்கு ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வரும் தொல்லியல் துறை இயக்குநர் மருத்துவர் மஸ்ஸிம்மோ ஒஸன்னா தெரிவித்துள்ளார்.
அதோடு, சுடுமண்ணால் கட்டப்பட்ட இந்த கட்டமைப்பில் வண்ண ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. அவற்றில் சில பன்றி, கோழி போன்ற இறைச்சிகளும் விற்பனை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, துரித உணவகங்களில் சுடச்சுட உணவுகள் பரிமாறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதன் மூலம், பொம்பேயி நகர மக்களின் வார்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள் போன்றவை தெரிய வந்துள்ளது.