பிரான்ஸை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் பியர் கார்டின் (98) செவ்வாய்க்கிழமை காலமானார்.
தனது 14 ஆவது வயதில் மாணவப் பருவத்தில் தையற்கலை உதவியாளராகத் தொடங்கிய இவரது பயணம், 7 பதிற்றாண்டுகள் நீடித்தது. பெண்களின் ஆடைகளில் மட்டுமே அனைத்து வடிவமைப்பாளர்களும் கவனம் செலுத்திய காலத்தில், 1960 களில் புதிய பாணியை அறிமுகம் செய்து, ஆண்கள்- பெண்களின் ஆடைகள், அணிகலன்கள் ஆகியவற்றின் வடிவமைப்பை புதிய பாதைக்குத் திருப்பிய பெருமைக்குரியவர் பியர் கார்டின்.
1959 இல் பெண்களின் நவீன ஆடைகள் வரிசையில் ஆயத்த ஆடைகளை அறிமுகம் செய்து அவர் புரட்சி செய்தபோதிலும், வடிவமைப்பாளர்களிடையே அவர் விமர்சனத்துக்கு உள்ளானார்.
மேலாடைகள், கைக்கடிகாரம், டை, பேனா, பெல்ட், உள்ளாடை, ஆண்-பெண் காலுறைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பேஷன் சாதனங்கள் அவரது பெயரைத் தாங்கி உலகெங்கிலும் ஒரு லட்சம் விற்பனையகங்களில் விற்பனை செய்யப்பட்டன.
பெண்களுக்கான மிக விலையுயர்ந்த ஆடைகளின் விற்பனையைவிட பெண்களின் காலுறை விற்பனை மூலம் தான் அதிகம் லாபம் ஈட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காலப்போக்கில் அவரது வடிவமைப்புகளுக்கு வரவேற்பு குறைந்தபோதிலும், தனது வருவாயில் பெரும் பகுதியை பாரீஸ் நகரின் மையப் பகுதியில் பல கட்டடங்களை வாங்குவதில் முதலீடு செய்தது அவருக்கு கைகொடுத்தது.
பியர் கார்டினின் மறைவால், சர்வதேச ஆடை வடிவமைப்புத் துறையில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்ததாக அவருடைய சீடராக வாழ்க்கையைத் தொடங்கிய பிரபல வடிவமைப்பாளர் ஜான் பால் கோல்டியேர் கூறினார்.