ஜப்பானிய நிறுவனம் ஒன்றும் கியோட்டோ பல்கலைக்கழகமும் இணைந்து மரத்தால் செய்யப்பட்ட உலகின் முதல் செயற்கைக்கோள்களை 2023ஆம் ஆண்டுக்குள் தயாரிக்க திட்டமிட்டுள்ளன.
மரங்களின் வளர்ச்சி மற்றும் விண்வெளியில் மரப் பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளதாக சுமிட்டோமோ ஃபாரஸ்ட்ரி என்ற ஜப்பானிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுமிட்டோமோ ஃபாரஸ்ட்ரி நிறுவனமும் கியோட்டா பல்கலைக்கழகமும் இணைந்து பூமியின் தீவிர சூழல்களில், பல்வேறு வகையான மரங்களை பயன்படுத்தி அவற்றின் பயன்பாடு குறித்த தரவுகளைத் திரட்டும்.
விண்வெளியில் ஒவ்வோர் ஆண்டும், முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகமான செயற்கைக்கோள்கள் செலுத்தப்படுவதால் “விண்வெளிக் குப்பைகள்” என அழைக்கப்படும் விண்வெளிக் கழிவுகள் அதிகரித்து வருகின்றன.
பூமியின் மண்டலத்துக்குள் நுழையும்போது மரத்தாலான செயற்கைக்கோள்கள் வெடித்தாலும், அவை தற்போதுள்ள செயற்கைக்கோள்களை போன்று தீங்கு விளைவிக்கும் பொருட்களையோ பூமியின் நிலப்பரப்பில் கழிவுகளையோ வெளியேற்றாது.
“பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் அனைத்து செயற்கைக்கோள்களும் ஏதோ ஒரு கட்டத்தில் எரிகின்றன. அப்போது வெளிப்படும் சிறிய அலுமினிய துகள்கள் பல ஆண்டுகளாக வளிமண்டலத்தின் மேல்பகுதியில் மிதப்பது குறித்து நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம்” என்று கியோட்டோ பல்கலைக்கழக பேராசிரியரும் ஜப்பானிய விண்வெளி வீரருமான தகாவோ டோய் பிபிசியிடம் தெரிவித்தார்.
“இறுதியில் இது பூமியின் சுற்றுச்சூழலை பாதிக்கும். எங்களது ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக நாங்கள் உத்தேசிக்கும் செயற்கைக்கோளின் மாதிரியை உருவாக்க உள்ளோம்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
தகாவோ டோய், கடந்த 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றிருந்தார். அப்போது, நுண்ணீர்ப்பு விசையில் பயன்படுத்தத்தக்க வகையில் வடிமைக்கப்பட்ட ‘பூமராங்’ எனப்படும் வளைத்தடியை விண்வெளியில் வீசிய முதல் நபர் என்ற சாதனையை படைத்திருந்தார்.
400 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட சுமிட்டோமோ குழுமத்தின் கிளை நிறுவனங்களில் ஒன்றான சுமிட்டோமோ ஃபாரஸ்ட்ரி, வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் சூரிய ஒளியை எதிர்க்கும் மரப்பொருட்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.
தங்களது இந்த ஆராய்ச்சிக்காக பயன்படுத்தி வரும் மரம் குறித்து ரகசியம் காக்கப்பட்டு வருவதாக அந்த நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.
சமீப ஆண்டுகளாக அதிக விண்கலன்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் ஏவப்படுவதால் உண்டாகும் விண்வெளிக் குப்பைகளால் பூமிக்கு ஏற்படும் அபாயம் குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தகவல் தொடர்பு, தொலைக்காட்சி, வழிசெலுத்தல் மற்றும் வானிலை முன்னறிவிப்புக்கு செயற்கைக்கோள்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. விண்வெளிக் குப்பைகளை அகற்றவும் குறைக்கவும் விண்வெளி வல்லுநர்களும் ஆராய்ச்சியாளர்களும் பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
உலக பொருளாதார மன்றத்தின் (WEF) தரவின்படி, பூமியை சுற்றி 6,000-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் உள்ளன. அவற்றில் சுமார் 60% செயலிழந்த நிலையில் உள்ளதால் அவை விண்வெளிக் குப்பைகளாகக் கருதப்படுகின்றன.
ஆராய்ச்சி நிறுவனமான யூரோகான்சால்ட், இந்த தசாப்தத்தில் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 990 செயற்கைக்கோள்கள் ஏவப்படும் என்று மதிப்பிடுகிறது. இதே நிலை தொடர்ந்தால், 2028ஆம் ஆண்டில் 15,000 செயற்கைக்கோள்கள் பூமியை அவை வட்டமிடும் சுற்றுப்பாதையில் இருக்கக்கூடும்.
ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், அதிவேக இணைய சேவைக்கு வித்திடும் திட்டத்திற்காக 900-க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை ஏற்கனவே ஏவியுள்ளது. மேலும் பல்லாயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை செலுத்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
விண்வெளிக் குப்பைகள் மணிக்கு 35,000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிப்பதால், அவை தாக்கும் எந்தவொரு பொருளுக்கும் கணிசமான சேதத்தை ஏற்படுத்தும்.