இந்தியாவில் மாதவிடாய் ஏற்படும் சுமார் 35.5 கோடி பெண்கள் மற்றும் சிறுமியர் உள்ளனர். அரசின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -4 (என்.எஃப்.எச்.எஸ்) படி, 15-24 வயதுடைய இளம் பெண்களில் 42 சதவிகிதம் பேர் சானிட்டரி பேட்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த புள்ளிவிவரங்களில் 24 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் எண்ணிக்கை சேர்க்கப்பட்டால், மாதவிடாய் காலங்களில் பேட்களைப் பயன்படுத்தும் பெண்களின் சதவிகிதம் மேலும் அதிகரிக்கும்.
சமீபத்திய ஆண்டுகளில், அரசும், தன்னார்வ அமைப்புகளும் மாதவிடாய் மற்றும் அந்த நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுத்தம், சுகாதாரம் குறித்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ந்து முயன்று வருவதைக் காண முடிகிறது.
இப்போது வரை, மாதவிடாய் காலங்களில் சானிட்டரி பேட்களின் பயன்பாடு ஒரு தூய்மையான தீர்வாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் அதை குறிப்பிட்ட நேரங்களில் மாற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் பயன்படுத்தப்படும் சானிட்டரி பேட்களின் கழிவுகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி அரிதாகவே பேசப்படுகிறது.
“சானிட்டரி பேட்கள் மற்றும் டயப்பர்களின் தயாரிப்பு மற்றும் பயன்பாடு நாட்டில் நிறைய அதிகரித்துள்ளது என்பதை நாங்கள் காண்கிறோம். மேலும் அவை குப்பைத் தொட்டியில் கொட்டப்படும் விதமானது குப்பைகளை வகைபிரிக்கும் பணியை செய்வோருக்கு ஆபத்தாக உள்ளது.
யார் சானிட்டரி பேட்களைத் தயாரிப்பவராக இருந்தாலும், ஒவ்வொரு சானிட்டரி பேடையும் தூக்கி எறிவதற்கு டீக்ரேடபிள் (அதாவது மக்கிபோகக்கூடியவை) பைகளை கொடுக்க வேண்டும் என்று 2021ஆம் ஆண்டு முதல் கண்டிப்புடன் விதிமுறைகளை நாங்கள் செயல்படுத்த உள்ளோம்,” என்று இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
இந்த விதிகள் இப்போதும் அமலில் உள்ளன. ஆனால் உற்பத்தி நிறுவனங்கள் அதைப் பின்பற்றுவதில்லை என்று அவர் மேலும் கூறினார்.
அரசின் இந்த நடவடிக்கை ஒரு பயனுள்ள நடவடிக்கையாக கருதப்படுகிறது. கிராமப்புற மற்றும் குடிசைப்பகுதிகள், சிறு மற்றும் நடுத்தர நகரங்கள் உள்ளிட்ட பல நகர்ப்புறங்களில் குப்பைகளின் வகைபிரிப்பு, முறையாக மேலாண்மை செய்யப்படவில்லை என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த நிலையில், பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்கள் திறந்தவெளிகளில் வீசப்படுகின்றன.
ஓடும் நீர், குளம் அல்லது ஆற்றில் போடப்படுகின்றன, மண்ணில் புதைக்கப்படுகின்றன அல்லது திறந்த நிலையில் எரிக்கப்படுகின்றன. குப்பைகளை பிரிப்போர் இவற்றுடன் தொடர்பில் வருகின்றனர். இதன் காரணமாக அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படக்கூடும். இத்தகைய சூழ்நிலையில், இந்த டீக்ரேடபிள் பைகள், குப்பைகளை அப்புறப்படுத்துவோருக்கு உதவிகரமாக இருக்கக்கூடும். மென்ஸ்டுரல் ஹெல்த் அலையன்ஸ் இந்தியா (எம்.எச்.ஏ.ஐ) சானிட்டரி பேட் கழிவுகளை மதிப்பீடு செய்துள்ளது. இந்த தகவலில், NFHS-4 இன் கணக்கெடுப்பையும் அது சேர்த்துள்ளது.
MHAI என்பது மாதவிடாயின் போது உடல்நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் பணியாற்றும் நிறுவனங்களின் வலையமைப்பாகும்.
அவற்றின் மதிப்பீட்டின்படி,நாட்டில் 12.1 கோடி பெண்கள் சானிட்டரி பேட்களைப் பயன்படுத்துகின்றனர். பெண்கள் ஒரு சுழற்சியில் எட்டு பேட்களை பயன்படுத்தினால், ஒரு மாதத்தில் பெண்கள் நூறு கோடி பேட்களை பயன்படுத்துகிறார்கள் அதாவது ஒரு வருடத்தில் 1200 கோடி பேட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் இந்த கழிவுகள் எங்கே போகிறது? பயன்படுத்தப்பட்ட சானிட்டரி பேட்களை தூக்கி எறிவதற்காக உற்பத்தி நிறுவனங்கள் டீக்ரேடபிள் பைகளை வழங்குவது குறித்து அரசு பேசுகிறது. ஆனால் சானிட்டரி பேட் கழிவுகளைப் பற்றி சிந்திப்பதும் மிக முக்கியமாகும்.
இந்த அமைப்பின் கூற்றுப்படி, ஒரு சானிடரி பேட் சிதைவதற்கும், மக்கி போவதற்கும் 500-800 ஆண்டுகள் ஆகும். ஏனெனில் அதில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், மக்கும் தன்மை இல்லாதது. அவற்றை அழிக்க முடியாது. இது ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
சானிட்டரி பேட்களுடன் டிஸ்போஸபிள் பைகள் வழங்குவதற்கான அரசின் முடிவின் ஒரு பகுதியாக தனது நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், இவை நுகர்வோருக்கு மிகவும் மலிவான விலையில் வழங்கப்படுகின்றன என்றும் நைன் சானிட்டரி நாப்கின் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சா சிங் கூறுகிறார்.
தனது நிறுவனம் வழங்கும் டீகம்போஸபிள் பைகள் மக்கும் தன்மை கொண்டவை என்று அவர் கூறுகிறார். அவை வெப்பத்தை நன்கு உறிஞ்சி, விரைவில் மக்கிப்போய்விடும்.
பேடில் பயன்படுத்தப்படும் பல கூறுகள் சிதைவடைவதில்லை.
அவர் இந்தக்கூற்றை ஒப்புக்கொள்கிறார். “பல பேடுகளில் இருக்கும் மேல் மற்றும் கீழ் தாள், மக்கும் தன்மை கொண்டவை அல்ல.ஆனால் இதற்கு தொழில் ரீதியாக எந்த தீர்வும் இல்லை. ஆனால் அது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மேலும் விநியோகப் பொருள் எங்கிருந்து வரும் என்றும் ஆராயப்படுகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறுவனங்கள் மக்கும் தன்மை கொண்ட பேடுகளை தயாரிக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.
சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பேட்கள், செல்லுலோஸ் சூப்பர் அப்ஸார்பண்ட் பாலிமர் (எஸ்ஏபி), பிளாஸ்டிக் மேலுறை மற்றும் பசை ஆகியவற்றால் ஆனவை. அவை எளிதில் சிதையவோ, மக்கவோ செய்யாமல் சுற்றுச்சூழலில் தொடர்ந்து நிலைத்திருக்கும் . நீர் மற்றும் மண்ணை மாசுபடுத்தும்.
குறிப்பாக, எஸ்.ஏ.பி இருக்கும் சானிட்டரி பேட்களை எரிப்பதால் வெளியாகும் டையாக்ஸின் மற்றும் ஃப்யூரான்ஸ் போன்ற நச்சு ரசாயனங்கள், கார்சிநோஜென் அதாவது புற்றுநோய் ஏற்படுத்தக் கூடியவை. இது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.
அதே நேரத்தில், இந்திய தர நிர்ணய அமைப்பின் கீழ், சானிட்டரி பேட்கள் தயாரிப்பதற்கான தர நிர்ணயங்களை அரசு மதிப்பாய்வு செய்துள்ளது. இதன்மூலம் கம்போஸ்ட் (மக்கு உரம்) அல்லது பிற வகை உரம் தயாரிக்க முடியும் என்று உற்பத்தியாளர்கள் எங்கு கூறுகிறார்களோ அத்தகைய பேட் தயாரிப்புகள் ஆராயப்படுகின்றன. இந்த தயாரிப்புகள் பரிசோதிக்கப்பட வேண்டும்.
ஆகார் இன்னோவேஷன் பிரைவெட் லிமிடெட் நிறுவகர் ஜெய்தீப் மண்டல் பல ஆண்டுகளாக இந்த திசையில் பணியாற்றி வருகிறார். மேலும் தனது நிறுவனம் கம்போஸ்ட் பேட்களை தயாரிக்கும் இந்தியாவின் முதல் நிறுவனம் என்றும் கூறுகிறார். மாற்று வழிகள் என்ன? மண்டல், பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார். தனது நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பேட்களில் உள்ள அனைத்து பொருட்களும் மக்குஉரம் தயாரிக்கக்கூடியவை என்றும் அவற்றில் பிளாஸ்டிக் உறைகளுக்கு பதிலாக உருளைக்கிழங்கிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஸ்டார்ச் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
சானிட்டரி பேட்களில் பயன்படுத்தப்படும் மரக் கூழ் , அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து வருகிறது என்றும் இதை குறைக்க மாற்று வழிகளை தேடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதில் வாழை அல்லது கரும்புகளிலிருந்து கிடைக்கும் நார், சணல் மற்றும் மூங்கிலில் இருந்து வரும் நார் போன்றவையும் அடங்கும்.
“பேட்கள், பயோ டீக்ரேடபிளாக இல்லாமல் கம்போஸ்டாக இருக்கவேண்டும்.அதாவது அவை உரமாக மாற வேண்டும். பயோ டீக்ரேடபிள் என்பது இயற்கையான முறையில் அழிவது . இதற்கு ஒரு நாள் முதல் பல ஆண்டுகள் ஆகக்கூடும். ஆக்ஸோ டீக்ரேடபிளாக இருக்கும் பேட்களை தயாரிக்கும் நிறுவனங்களும் சந்தையில் உள்ளன. அதாவது அவை சூரிய கதிர்கள், புற ஊதா கதிர்கள் மற்றும் வெப்பம் காரணமாக மைக்ரோ பிளாஸ்டிக்காக மாறுகின்றன. இந்த மைக்ரோ பிளாஸ்டிக், விலங்குகளுக்கு மிகவும் ஆபத்தானது.. ஏனென்றால் விலங்குகள் நிலத்திலிருந்து பொருட்களை நேரடியாக சாப்பிடுகின்றன. இதன் காரணமாக இந்த மைக்ரோ பிளாஸ்டிக்கும் அவற்றின் வயிற்றுக்குள் செல்கிறது. அதே நேரத்தில், இது மனித உடலுக்குள்ளும் செல்லும் ஆபத்து உள்ளது,” என்று அவர் விளக்குகிறார்.
ஆக்ஸோ டீக்ரேடபிள் பொருட்கள் மீது ஐரோப்பாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சானிட்டரி பேட்களின் கழிவுகளை மேலாண்மை செய்ய டிஸ்போஸபிள் பைகளோடு கூடவே எரிஉலைகளை(Incinerator) பயன்படுத்த ரிச்சா சிங் வலியுறுத்துகிறார்.
பேட் கேர் லேப் ஸ்டார்ட்அப்பின் உரிமையாளரான அஜிங்க்யா தாரியா இந்த நிறுவனத்தை 2018 ஐ தொடங்கினார். அவர் மத்திய மற்றும் மகாராஷ்டிரா அரசுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறார்.
டிஸ்போஸபிள் பைகளை வழங்குவதற்கான அரசின் நடவடிக்கையை அவர் நியாயப்படுத்துகிறார். ஆனால் சானிடரி நேப்கின்களின் கழிவுகளை சரியான முறையில் அப்புறப்படுத்த எரிஉலையை பயன்படுத்துவதை அவர் சரி என்று நினைக்கவில்லை. இதற்கு விஞ்ஞான ரீதியான ஒரு காரணத்தை அவர் சொல்கிறார். ”எரி உலையில் கழிவு அல்லது குப்பை 800 டிகிரியில் எரிக்கப்படுகிறது. இதில் பிளாஸ்டிக் மற்றும் பிற குப்பைகளும் உள்ளன. ஆனால் விதிமுறைகளின்படி, இதுபோன்ற பயோமெடிக்கல் கழிவுகள் எரிஉலைக்கு செல்ல வேண்டும். அதிலிருந்து வெளியேறும் சாம்பலை வேறு இடத்தில் வீச வேண்டும். இந்த செயல்முறை கடைபிடிக்கப்பட வேண்டும், ஆனால் அது நடப்பதில்லை,” என்று அவர் கூறுகிறார்.
எரிஉலை வசதிகளை வழங்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக MHAI தனது அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த உமிழ்வு தரநிலைகள் பல நேரங்களில் பூர்த்தி செய்யப்படுவதில்லை. குறைந்த விலையிலான எரிஉலைகள், குறைந்த வெப்பநிலையில் கழிவுகளை எரிக்கிறது. அதிலிருந்து வெளியேறும் ஆபத்தான வாயுக்களை சரியாக நிர்வகிக்க முடிவதில்லை.
டெவெலப்மெண்ட் சல்யூஷன்ஸ் அமைப்புடன் தொடர்புடைய தான்யா மகஜன் கூறுகையில், “பல பள்ளிகள், கல்லூரிகள், மால்கள் மற்றும் பெரிய ஹோட்டல்களில் எரிஉலைகள் பொருத்தப்பட்டுள்ளன. பல பள்ளிகளில் இந்த சானிடரி பேட் குப்பைகள் அவற்றில் நிரம்பிக்கிடப்பதை எங்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளோம். இதை ஜார்கண்டில் உள்ள குடியிருப்புப் பள்ளியில் நாங்கள் பார்த்தோம். சிறிய அளவிலான எரிஉலைகள் பயனுள்ளதாக இல்லை. அவற்றால் சரியாக எரிக்க முடியவில்லை என்பதைக் காண முடிந்தது. எரியும் செயல்பாட்டின் போது வெளியிடப்படும் ரசாயனங்கள் மற்றும் வாயுக்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பதையும் இங்கே காண வேண்டும்,” என்று குறிப்பிடுகிறார்.
தனது நிறுவனம் பள்ளி, கல்லூரி, வீட்டுவசதி சங்க அலுவலகங்கள் போன்றவற்றில் கட்டண பராமரிப்புத் தொட்டியைக் கொடுக்கிறது. இது ஒரு சென்சார் தொட்டி. அவை ஒவ்வொரு கழிப்பறையிலும் வைக்கப்படுகின்றன. இந்த தொட்டி துர்நாற்றம், பாக்டீரியா அல்லது வைரஸையும் கொல்லும். அது நிரம்பும்போது, நிறுவனம் ஒரு அறிவிப்பைப் பெறுகிறது. அவர்கள் தொட்டியை எடுத்துச்செல்கிறார்கள். இது எரிக்கப்படுவதில்லை, ஆனால் ஒரு வேதியியல் மற்றும் இயந்திர முறையில் அது செயலாக்கப்படுகிறது. பத்து நிமிடங்களுக்குப் பிறகு, பிளாஸ்டிக் அதிலிருந்து பிரிக்கிறது. அதை மீண்டும் பயன்படுத்த முடியும். மேலும் அதிலிருந்து கிடைக்கும் உரமும் உபயோகிக்கப்படுகிறது என்று அஜிங்க்யா தாரியா சொல்கிறார். பயன்படுத்தப்பட்ட சானிட்டரி பேட் கழிவுப் பிரச்னையை அரசும் புரிந்துகொண்டு வெவ்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் கருதுகிறார்.
இந்தியாவில், 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய அல்லது பல முறை பயன்படுத்தும் சானிட்டரி பேட்களை உருவாக்குகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வாழை நார், துணி அல்லது மூங்கிலால் செய்யப்பட்ட பேட்கள் இதில் அடங்கும்.
பல ஆண்டுகள் வரை இவற்றை பயன்படுத்துவதால் பொருளாதார ரீதியாக சேமிப்பும் , சுற்றுச்சூழலுக்கு ஏற்புடையதாகவும் இவை இருக்கும் என்று இதன் தயாரிப்பாளர்கள் வாதிடுகின்றனர். ஆனாலும், இந்தியா போன்ற ஒரு நாட்டில், மாதவிடாய் பற்றி பேசுவது இன்னும் ஒரு கூச்சம் தரும் விஷயமாக இருக்கும் நிலையில், பெண்கள் எப்படி திறந்த வெளியில் துணிகளை அல்லது பேட்களை உலர வைக்க முடியும் என்று பேட் உற்பத்தியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த பேட்கள் சூரிய ஒளியைப் பெறாவிட்டால், சரியாக துவைத்து உலர வைக்காவிட்டால், அவை தொற்றுநோய் ஏற்படக்கூடிய ஒரு காரணமாகவும் ஆகலாம் என்று அவர்கள் மேலும் கூறுகின்றனர். நிதி ஆயோக்கின் பொதுமக்கள் கொள்கை நிபுணரான ஊர்வசி பிரசாத், பயோடீக்ரேடபிள் பேட்கள் இருக்க வேண்டும் , அதுபற்றி விவாதமும் நடக்கிறது என்று கூறுகிறார். ஆனால் பல சவால்கள் உள்ளன என்று அவர் கருதுகிறார். உதாரணமாக, இதுபோன்ற பேட்கள் தயாரிக்க அதிக செலவு பிடிக்கும் என்பதால் விலை எத்தனை அதிகரிக்கும், எத்தனை பெண்கள் அதை வாங்க முடியும், எவ்வளவு பெரிய அளவில் இவற்றை தயாரிக்கமுடியும், உண்மையில் இதை எவ்வளவு தூரம் செயல்படுத்த முடியும், போன்ற சவால்கள் இதில் அடங்கும்.
இந்தியா போன்ற ஒரு நாட்டில், தயாரிப்பு அளவு மிக அதிகமாக இருக்கக்கூடிய ஒரு சூழலில் இந்தப் பணி மிகவும் சவாலானதாக இருக்கக்கூடும் என்று ஊர்வசி கருதுகிறார்.
நகரங்களில் பேட்களின் அதிக பயன்பாடு இருப்பதாக முன்னர் காணப்பட்டது. ஆனால் பெண்கள் மத்தியில் தூய்மை குறித்து விழிப்புணர்வு இருப்பதையும் அவர்கள் சானிடரி பேட்களைப் பயன்படுத்துவதையும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் என்.எஃப்.எச்.எஸ் -4 இன் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், வரவிருக்கும் பிரச்னைகளை சமாளிக்க அரசு செயல்பட்டு வருகிறது.
“முன்பு கழிவறை வசதிகள் அவ்வளவாக இல்லை. அரசு அதன் மீது கவனம் செலுத்தியது. பின்னர் படிப்படியாக சுகாதாரம் மற்றும் தூய்மை பற்றிய பேச்சு எழுந்தது. அதாவது இதில் மாதவியாய் தூய்மையும் அடங்கும். இது வளர்ச்சியின் இயல்பான முன்னேற்றம் மற்றும் நீங்கள் ஒவ்வொரு படியாக முன்னேறுகிறீர்கள். நகரங்களில் உள்ள தூய்மை இயக்கத்தைப் பார்க்கும்போது, வேஸ்ட் மேனேஜ்மெண்ட்(கழிவு மேலாண்மை) அதில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் மாதவிடாய் கழிவுகளும் அடங்கும்,” என்று ஊர்வசி தெரிவிக்கிறார்.
அரசின் டிஸ்போசபிள் பைகள் நடவடிக்கை நல்லதுதான், ஆனால் நிறுவனங்களுக்கு இதில் பெரிய பங்குபணி இருக்கும். அதே நேரத்தில் நுகர்வோர் தனித்தனியாக கழிவுகளை பிரித்து கொட்டும் பழக்கத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தான்யா மகஜன் கூறுகிறார்.
இந்தக் கழிவுகள் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன, கொண்டு செல்லப்படுகின்றன மற்றும் மேலாண்மை செய்யப்படுகின்றன, இவை அனைத்துமே முக்கியமானது. கழிவுகளை, குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்வது மட்டுமே ஒரே தீர்வு அல்ல. ஒவ்வொருவரும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும்.