இந்தியா – அவுஸ்திரேலியா இடையேயான 3 வது டெஸ்டை நேரில் காண சிட்னி மைதானத்துக்கு வருகை தரும் ரசிகர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.
ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது அவுஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2 வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1 – 1 என சமன் செய்துள்ளது. 3 வது டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியுள்ளது. 4 வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15 இல் தொடங்குகிறது.
இந்தியா – அவுஸ்திரேலியா இடையேயான 2 வது டெஸ்ட் நடைபெற்ற மெல்போர்ன் மைதானத்துக்கு வந்திருந்த ரசிகர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து டிசம்பர் 27 ஆம் திகதி அந்த மைதானத்தில் ஜோன் 5 பகுதியில் கூடியிருந்த ரசிகர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும், அறிகுறிகளுடன் இருப்பவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 2 ஆவது டெஸ்டின் போது மெல்போர்ன் மைதானத்தில் சுமார் 30,000 ரசிகர்கள் இருந்தனர்.
இந்நிலையில் 3 வது டெஸ்ட் நடைபெறும் சிட்னி மைதானத்துக்கு வருகை தரும் ரசிகர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் பிராட் ஹஸ்ஸார்ட் கூறியதாவது : சிட்னி மைதானத்தில் நீங்கள் அமர்ந்திருக்கும் போது முகக்கவசத்தைக் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். சாப்பிடும் போதும் குடிக்கும் போதும் மட்டும் முகக்கவசத்தை அணியத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.