கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
போா்ச்சுகலின் நட்சத்திரக் கால்பந்து வீரா் ரொனால்டோ, உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக மதிப்பிடப்படுபவர். 100 சர்வதேச கோல்கள் அடித்த இரு வீரர்களில் ஒருவர். பிரபலங்களின் வருமானப் பட்டியலை அவ்வப்போது வெளியிடும் போர்பஸ் பத்திரிகை, ரொனால்டோவின் சாதனையைக் கடந்த வருடம் குறிப்பிட்டது.
அதன்படி, 1 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டிய முதல் கால்பந்து வீரர் என்கிற பெருமையை ரொனால்டோ அடைந்தார். டைகர் வுட்ஸ், பிளாய்ட் மேவெதர் ஆகிய விளையாட்டு வீரர்களுக்குப் பிறகு 1 பில்லியன் டொலர் வருமானத்தைத் தொட்ட மூன்றாவது விளையாட்டு வீரர், ரொனால்டோ.
இந்நிலையில் கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்கிற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.
ரொனால்டோ இடம்பெற்றுள்ள ஜுவென்டஸ் அணி, இத்தாலியன் சூப்பர் கோப்பையை 9 வது முறையாக வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் நபோலி அணியை 2 – 0 எனத் தோற்கடித்து பட்டம் வென்றது. இதில் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார்.
இதன்மூலம் சர்வதேச மற்றும் கிளப் ஆட்டங்களில் தனது 760 வது கோலை அவர் அடித்துள்ளார். 759 கோல்கள் அடித்த ஜோசெஃப் பிகானின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
1040 ஆட்டங்களில் ரொனால்டோ விளையாடியுள்ளார். அதில் ரியல் மாட்ரிட் அணிக்காக 450 கோல்களும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 118 கோல்களும் போர்ச்சுகல் அணிக்காக 102 கோல்களும் ஜுவென்டஸ் அணிக்காக 85 கோல்களும் ஸ்போர்டிங் லிப்சன் அணிக்காக 5 கோல்களும் அடித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 69 கோல்கள் அடித்துள்ளார்.