சசிகலாவை தொடர்ந்து அவரது உறவினர் இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் அவரும் சசிகலா சேர்க்கப்பட்டிருக்கும் விக்டோரியா மருத்துவனையில் நேற்று சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 21ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்திருந்தது.
ஜனவரி 27-ம் தேதி தனது தண்டனை முடிந்து சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், சில தினங்களுக்கு முன் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு அவர் பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இந்நிலையில் நேற்று சசிகலாவுக்கு கொரனா வைரஸ் தொடர்பான அறிகுறிகள் குறைந்திருப்பதாகவும், மேலும் அவர் சுய நினைவோடு, தெளிவாக இருக்கிறார் எனவும் குறிப்பிட்டிருக்கிறது. மேலும் சசிகலா நிலையாக இருப்பதாகவும், வழக்கம் போல வாய் வழியாக உணவு உட்கொள்வதாகவும், மருத்துவமனை வழங்கும் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை வந்த மருத்துவமனை அறிக்கையில், அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், வாழ் வழியாக உணவு உட்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான் சசிகலாவின் உறவினரும், அவருடன் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருப்பவருமான இளவரசிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா தண்டனை பெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல் குற்றவாளி. ஆனால், அவரது மரணத்துக்குப் பிறகே உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்ததால், அவருக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை.
இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான சசிகலா தமக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்திவிட்டார். இதன் அடிப்படையில் அவர் 27-ம் தேதி விடுதலை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் தமிழ்நாட்டுக்கு வந்த பின், பல அரசியல் காட்சிகள் மாறும் என அரசியல் விமர்சகர்கள் ஆருடம் கூறிவருகிறார்கள்.