பங்கதேஷில் ஒருபாலுறவு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியாக, ஒருபாலுறவாளர்களின் உரிமைகளுக்கான குழுவொன்று, அந்நாட்டில் முதல்தடவையாக ஒருபாலின-பெண் கார்ட்டூன் கதைச்சித்திரப் பாத்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
தாம் யாரைக் காதலிக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் மக்களுக்கு இருக்க வேண்டும் என்ற செய்தியை இந்த கார்ட்டூன் பரவச்செய்யும் என்று எதிர்பார்ப்பதாக ‘பாய்ஸ் ஆஃப் பங்களாதேஷ்’ என்ற குழு தெரிவித்துள்ளது.
பங்கதேஷில் ஒருபாலுறவு என்பது ஒரு குற்றச்செயல். அங்கு ஒருபாலுறவாளர்கள் அச்சம் காரணமாக பெரும்பாலும் தங்களின் அடையாளங்களை மறைத்துக் கொள்ளவேண்டிய நிலையே உள்ளது.
தீ (Dhee) என்ற பெயருடைய பெண் பாத்திரம் இன்னொரு பெண்ணுடன் காதல் வயப்படுவதாகவும், குடும்பத்தாரை மகிழ்விப்பதற்காக ஆண் ஒருவரை திருமணம் புரிய வேண்டுமா அல்லது தற்கொலை செய்துகொள்ள வேண்டுமா அல்லது விரும்பியவருடன் வாழவேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டிய சூழ்நிலையில் சிக்கிக் கொள்வதாகவும் இந்தப் புதிய கார்ட்டூன் கதை அமைந்துள்ளது.