ஜெயலலிதா நினைவிட திறப்பு நிகழ்ச்சிக்குச் சென்ற திண்டுக்கல்லைச் சேர்ந்த 60 வயது முதியவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிழந்தார்.
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரீனாவில் 50,422 சதுர அடி பரப்பளவில் ரூ.80 கோடி செலவில் நினைவிடம் கட்டப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று (ஜன.27) நினைவிடம் திறக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்துவைத்தார். துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் உடன் இருந்தனர்.
ஜெயலலிதா நினைவிடம் திறப்பையொட்டி சென்னை மெரீனாவில் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். சென்னை மெரீனா மற்றும் சுற்றுப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் ஆயிரக்கணக்கானோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நிகழ்ச்சி முடிந்து அதிமுகவினர் பொதுமக்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்தைக் காண வரிசையாக அனுப்பப்படுகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள சிறு குடியைச் சேர்ந்த பொ.மூக்கன் (60) கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.