மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் திகதி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் திறக்கப்பட்டுள்ள வெண்கல சிலைக்கு ஆண்டுதோறும், அரசு விழாவின்போது மலர் தூவி மரியாதை செலுத்தப்படும் என்றும் கூறினார்.
லேடி வெலிங்டன் கல்லூரியில் ஜெயலலிதாவிற்கு 9 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட வெண்கல சிலையை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று (ஜன.28) திறந்து வைத்தனர்.
பின்னர் உயர்கல்வி மன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது, பல்வேறு சோதனைகளை வென்று அரசியலில் தனக்கென தனியிடம் பிடித்து சாதித்துக் காட்டியவர் ஜெயலலிதா.
பெண்கள், குழந்தைகளுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரணாக விளங்கினார். அவரது வழியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தற்போது அதிமுக அரசு அரணாக விளங்குகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் மாணவர்களின் உயர்கல்விக்கு அரசு சார்பில் அதிக அளவு நிதி செலவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
ஜெயலலிதா ஆட்சியில் உயர்கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கை 100க்கு 32 ஆக இருந்த நிலையில், அவரது வழியில் செயல்படும் அரசின் நடவடிக்கையால் தற்போது 100 க்கு 49 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவிலேயே அதிக அளவிலான மாணவர்கள் உயர்கல்வி பயில்வது தமிழகத்தில் தான் என்றும் கூறினார்.
ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் திகதி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
மேலும், காமராஜர் சாலையில் திறக்கப்பட்டுள்ள வெண்கல சிலைக்கு ஆண்டுதோறும், அரசு விழாவின்போது மலர் தூவி மரியாதை செலுத்தப்படும் என்றும் முதல்வர் கூறினார்.