அமேசான் பிரைமில் மாஸ்டர் திரைப்படம் நள்ளிரவு வெளியான நிலையில், அதன் ஹெச்.டி பிரின்ட் பைரசி தளங்களில் கசிந்துள்ளன. மேலும், இன்னமும் ஒடிடி தளத்தில் வெளியாகாத ஈஸ்வரன் திரைப்படத்தின் ஹெச்.டி பிரின்ட்டும் லீக்காகி டவுன்லோடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் முன்னதாகவே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காட்சிகள் லீக்காகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. பின்னர், தியேட்டரில் வெளியான மாஸ்டர் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் போதே அமேசானில் நள்ளிரவு வெளியானது. இந்நிலையில், அதிகாலையிலேயே மாஸ்டர் படத்தின் திருட்டு பிரின்ட் லீக்காகி விட்டது.
தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் முடக்கப்பட்டுள்ள நிலையில், டெலிகிராம் மற்றும் தமிழ் எம்.வி உள்ளிட்ட பைரசி தளங்களில் மாஸ்டர் படத்தின் ஹை குவாலிட்டியான ஹெச்.டி பிரின்ட் அப்படியே அமேசானில் இருந்து சுடச்சுட திருடப்பட்டு பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது. அமேசான் பிரைம் சந்தாதரர்கள் அல்லாதவர்கள் திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்து மாஸ்டரை பார்த்து வருகின்றனர்.
வரும் பிப்ரவரி 12ம் தேதி தான் சிம்ப்ளி சவுத் ஒடிடி தளத்தில் சிம்புவின் ஈஸ்வரன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர் படத்துடன் கூடவே சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் ஹெச்.டி பிரின்ட்டும் எப்படி கசிந்தது என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக அமைந்துள்ளது.
சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் தியேட்டரில் வெளியான ஜனவரி 14ம் தேதியே வெளிநாடுகளில் ஒடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தது. ஆனால், தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த திட்டத்தை படக்குழுவினர் கைவிட்டனர். இந்நிலையில், ஈஸ்வரன் படத்தின் ஹெச்.டி பிரின்ட்டும் கசிந்துள்ளது ஏகப்பட்ட சந்தேகங்களையும் கிளப்பி இருக்கிறது.
ஆன்லைன் பைரசியை எவ்வளவு போராடியும் சினிமா உலகத்தினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு காரணம், அதே சினிமா உலகில் இருக்கும் சில கருப்பு ஆடுகளே இதை செய்து வருவது தான் காரணம் எனக் கூறுகின்றனர். ஒடிடி தளத்தில் படங்கள் வெளியான அடுத்த கணமே அதை டவுன்லோடு செய்து திருட்டு பிரின்ட்டுகளை கசியவிட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.