தான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதில்லை என்று ரஜினி அறிவிக்கவில்லை என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.. கால சூழல் அவருடைய கனவை நனவாக்க இடம் தராத நிலையில் தற்போது அவர் கட்சி தொடங்குவதை தவிர்த்திருக்கிறார்.. அதேசமயம், மக்கள் மன்றத்தையும் அவர் கலைத்துவிடவில்லை என்று தமிழருவி மணியன் விளக்கம் தந்துள்ளார். ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ஆள் பிடிக்கும் அநாகரிக அரசியலை நான் அடியோடு வெறுக்கிறேன் என்றும் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் எப்படியாவது கட்சியை ஆரம்பித்துவிட வேண்டும் என்று, ரஜினியை விட அதிகமாக ஆர்வமாக இருந்தது மூத்த தலைவர் தமிழருவி மணியன்தான். ஒரு கட்டத்தில் ரஜினியே சும்மா இருந்தாலும், அவரை கட்சி தொடங்கும்படி எந்நேரமும் உசுப்பேத்தி கொண்டே இருந்தவர். இறுதியாக, உடம்பு சரியில்லாமல் இருப்பதால் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று ரஜினி அறிவிக்கவும், ரசிகர்களைவிட அளவுக்கு அதிகமாக ஷாக் ஆனது தமிழருவி மணியன்.. உச்சக்கட்ட வெறுப்பினால், அவர் ஒதுங்கியே போய்விட்டார்.
ஆனால், மறுபடியும் என்ட்ரி ஆகி இருக்கிறார்.. ஒரு அறிக்கையை வெளியிட்டு, ஒரு பேட்டியையும் தந்துள்ளர். அதில் முழுக்க முழுக்க ரஜினியை பற்றியே பேசியிருக்கிறார். “தான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதில்லை என்று ரஜினி அறிவிக்கவில்லை.. காலச் சூழல் அவருடைய கனவை நனவாக்க இடம் தராத நிலையில் தற்போது அவர் கட்சி தொடங்குவதை தவிர்த்திருக்கிறார்..
ரஜினி மக்கள் மன்றத்தை அவர் கலைத்துவிடவில்லை” காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் விளக்கம் தந்துள்ளார்.. இப்படி ஒரு விளக்கத்தை அவர் ஏன் தந்தார்? எதற்காக தந்தார்? வெறுத்து போய் வீட்டுக்கு போனவர் மறுபடியும் எதற்கு ரஜினி பெயரை பயன்படுத்தி கொண்டு வெளியே வந்துள்ளார் என்பது இன்னும் புரியவில்லை.. அந்த அறிக்கை இதுதான்:
“காந்திய மக்கள் இயக்கத்தில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சார்ந்த பலர் இணைந்து பணியாற்ற விரும்பி என்னுடன் தொடர்பு கொள்கின்றனர். ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்களுக்கு அன்புடன் ஒன்றை உணர்த்த விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் ரஜினி ஒரு நாள் அரசியல் களத்தில் அடியெடுத்து வைப்பார் என்ற எதிர்பார்ப்பிலும், முதல்வர் பதவியில் என்றாவது அமர்வார் என்ற கனவிலும் அவருடைய ரசிகர்களாக மாறவில்லை.
அவருடைய இயல்பான நடிப்பு, செயற்கைப் பூச்சு இல்லாத பேச்சு, ஆணவத்திற்குச் சற்றும் இடம் தராத அடக்கம், உள்ளத்தில் பட்டதை ஒளிவு மறைவின்றி உரைக்கும் நேர்மை, மிகச் சாதாரண மனிதனாகத் தன்னைப் பாவிக்கும் பண்பு நலன், அனைவரும் வியந்து பார்க்கும் ஆடம்பரமற்ற எளிமை, அன்பு சார்ந்து ஒவ்வொருவரிடமும் பழகும் உயர்குணம் ஆகியவற்றில் உங்கள் மனதைப் பறிகொடுத்துத்தான் நீங்கள் அனைவரும் அவருடைய ரசிகர்களாக மாறினீர்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அவருக்காக எதையும் இழக்கத் துணியும் உங்கள் உயரிய அர்ப்பணிப்பைக் கடந்த நான்காண்டுகள் நேரில் கண்டு நான் நெஞ்சம் நெகிழ்ந்திருக்கிறேன்.
பாழ்பட்ட அரசியலைப் பழுது பார்க்கவே ரஜினி அரசியல் உலகில் அடியெடுத்து வைக்க முயன்றார். காலச்சூழல் அவருடைய கனவை நனவாக்க இடம் தராத நிலையில் இப்போது அவர் கட்சி தொடங்குவதைத் தவிர்த்திருக்கிறார். நான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப்போவதில்லை என்று அவர் அறிவிக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தை அவர் கலைத்துவிடவுமில்லை.
இந்த நிலையில் அவருடைய கூற்றின்படி சிஸ்டத்தைச் சீரழித்தவர்களிடமே சில ரசிகர்கள் சரண் அடைந்திருப்பதையும்,சிலர் இளைப்பாறும் வேடந்தாங்கல் எதுவாக இருக்க முடியும் என்று அலைபாய்வதையும் கண்டு நான் வருந்துகிறேன். ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ஆள் பிடிக்கும் அநாகரிக அரசியலை நான் அடியோடு வெறுக்கிறேன். காந்திய மக்கள் இயக்கம் இந்த சந்தர்ப்பவாத செயலில் மறந்தும் ஈடுபடாது என்று உறுதிபட அறிவிக்கிறேன்.
காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்தின் சகோதர அமைப்பாகத் தொடர்ந்து செயற்படும். அவரவர் இடத்தில் இருந்தபடி கரங்கள் இணந்து காரியமாற்றுவோம். நான் ஒரு காந்தியவாதி இறக்கும் நாள்வரை இடையறாமல் தன்னலமின்றி சமூக நலன் சார்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இழிந்த விமர்சனங்களை இம்மியும் பொருட்படுத்தலாகாது. மாற்று அரசியலை வளர்த்தெடுக்கும் பணியில் நீங்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று சான்றாண்மை மிக்க மூத்தோர் பலர் வழங்கிய அறிவுரையை ஏற்கிறேன்.
தரம் தாழ்ந்த, தன்னலம் வாய்ந்த அரசியலை என்றும் நான் நடத்தியதில்லை. எந்த லாவணிக் கச்சேரியிலும் ஒரு நாளும் நேரத்தை விரயமாக்காமல் ஆக்கபூர்வமான அர்த்தமுள்ள பணிகளில் காந்திய மக்கள் இயக்கம் முன்னிலும் முனைப்பாக ஈடுபடும்.
மார்ச் 7-ம் நாள் திருப்பூரில் பொதுக்குழு கூடவிருக்கிறது. நாளையே ரஜினி அரசியலுக்கு வந்தாலும் காந்திய மக்கள் இயக்கம் அவருடன் சேர்ந்தே பயணிக்கும். அவர் அரசியலுக்கு வந்தாலும், வராமல் விலகி இருந்தாலும் பக்திபூர்வமாக அவரை நெஞ்சில் நிறுத்தி நேசிக்கும் எந்த மன்ற உறுப்பினரும் எவர் விரிக்கும் வலையிலும் சிக்கமாட்டார்கள் என்பது மட்டும் உறுதி” என்று கூறியுள்ளார்.