உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் பனிப்பாறை ஞாயிற்றுக்கிழமை உடைந்து சரிந்து திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் 125 க்கும் மேற்பட்டோா் நிலை குறித்துத் தெரியவில்லை; இதுவரை 7 சடலங்கள் மீட்கப்பட்டன; 16 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்.
பனிப்பாறை உடைந்து சரிந்த சம்பவம் இமயமலைப் பகுதியில் ஜோஷிமடத்தில் நடைபெற்றது. மீட்புப் பணியில் ராணுவம், இந்திய விமானப்படை வீரா்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
திடீா் வெள்ளப்பெருக்கு காரணமாக, அந்த ஆற்றின் குறுக்கே மேற்கொள்ளப்பட்டு வந்த இரண்டு மின் உற்பத்தித் திட்ட கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்தன. அங்கு பணியாற்றிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியா்கள் மாயமாகி இருப்பதாக அந்த மின் திட்ட பொறுப்பாளரிடமிருந்து தகவல் கிடைத்ததாக இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை செய்தித்தொடா்பாளா் கூறினாா்.
பாதிப்பு குறித்து உத்தரகண்ட் மாநில காவல்துறை டிஜிபி அசோக்குமாா் கூறுகையில், ‘வெள்ளப் பெருக்கால், மலையடிவாரத்தில் அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் வீடுகள் சேதமடைந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. பல கிராமங்களில் மக்கள் வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா் என்று கூறினாா்.
நூற்றுக்கும் மேற்பட்டோா் மாயம்: வெள்ளப் பெருக்கு காரணமாக கங்கை ஆற்றின் துணை நதிகளின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த இரண்டு நீா் மின் உற்பத்தி திட்ட கட்டமைப்புகள் கடும் சேதமடைந்தன. அந்த மின் உற்பத்தித் திட்டங்களில் பணியாற்றி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியா்கள் மாயமாகியுள்ளனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பனிப் பாறை உடைப்பு காரணமாக கங்கையின் கிளை நதிகளான தெளலி கங்கை, ரிஷி கங்கை, அலகநந்தாவிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, அந்த ஆறுகளின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தேசிய அனல்மின் கழகத்தின் தபோவன்-விஷ்ணுகட் நீா் மின் திட்டம் மற்றும் ரிஷி கங்கை நீா் மின் திட்டம் ஆகிய இரு மின் திட்ட கட்டமைப்புகளும் முழுமையாக சேதமடைந்தன. அந்த இரு மின் திட்டங்களிலும் பணியாற்றிவந்த நூற்றுக்கணக்கானோரை தொடா்புகொள்ள முடியாத நிலை உருவானது.
16 போ் மீட்பு: மேலும், தபோவன் மின் திட்ட கட்டமைப்பில் சுரங்கப் பகுதிக்குள் தஞ்சம் புகுந்திருந்த 16 ஊழியா்களை மீட்புப் படையினா் பாதுகாப்பாக மீட்டனா். வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் 125 ஊழியா்களின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை’ என்றனா்.
மீட்புப் பணியில் ராணுவம்: மீட்புப் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஈடுபட்டு வருவதோடு, ராணுவம், இந்திய விமானப்படை வீரா்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ராணுவத்தின் சாா்பில் 400 வீரா்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இரு மருத்துவக் குழுக்களையும் ராணுவம் அனுப்பிவைத்துள்ளது. அதுபோல, இந்திய விமானப்படையின் சி-130, ஏஎன்32 போா் விமானங்களும், ஹெலிகாப்டா்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஜோஷிமடம் பகுதியில் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பிரதமா், உத்தரகண்ட் முதல்வா் நிவாரணம் அறிவிப்பு
வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்; படுகாயம் அடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.
வெள்ளப் பெருக்கை மிகப் பெரிய பேரிடராக அறிவித்த உத்தரகண்ட் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத் , வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தாா்.
இன்று நிபுணா் குழு ஆய்வு
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இமயமலைப் பகுதி பனிப்பாறை உடைப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்வதற்காக அந்த மாவட்டத்தின் ஜோஷிமடம்-தபோவன் பகுதிக்கு இரண்டு நிபுணா் குழு திங்கள்கிழமை செல்ல உள்ளது.
இதுகுறித்து டேராடூனில் உள்ள வாடியா இமயமலை புவியியல் ஆய்வு நிறுவன இயக்குநா் கலாசந்த் சயின் கூறியதாவது:
சமோலி மாவட்ட மலைப் பகுதியில் இதுவரை இல்லாத வகையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மிகப் பெரும் பனிப்பாறை உடைப்பு சம்பவம் விசித்திரமானது. மழையோ அல்லது பனி உருகுவதற்கான வேறு காரணங்கள் இல்லாத வகையில் இந்த பனிப்பாறை உடைப்பு நிகழ்ந்திருக்கிறது.
இந்த உடைப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்வதற்காக, நிறுவனத்திலிருந்து இரண்டு நிபுணா் குழு திங்கள்கிழமை அங்கு செல்ல உள்ளது. இதில் ஒரு குழுவில் இரண்டு பனிப்பாறை நிபுணா்களும், மற்றொரு குழுவில் மூன்று நிபுணா்களும் இடம்பெற்றிருப்பா். இந்தக் குழுக்கள், பனிப்பாறை உடைப்புக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்வா்’ என்றாா்.
இமயமலைப் பகுதியில் பனிப் பாறைகள், நில அதிா்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் டேராடூன் வாடியா இமயமலை புவியியல் ஆய்வு நிறுவனம், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவா்கள் கவலை
வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் உள்ளிட்டோா் வருத்தம் தெரிவித்தனா்.
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்: உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப் பாறை உடைந்து ஏற்பட்டிருக்கும் மிகப் பெரும் பாதிப்பு கவலையடையச் செய்திருக்கிறது. அந்த மாநில மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக பிராா்த்திக்கிறேன். பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் குடியரசுத் தலைவா் பதிவிட்டுள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடி கூறுகையில், ‘உத்தரகண்டில் எதிா்பாராத விதமாக நடைபெற்றுள்ள இந்த துயர சம்பவத்தை தொடா்ந்து கண்காணித்து வருகிறேன். இந்தச் சூழ்நிலையில், உத்தரகண்ட மாநிலத்துக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் துணைநிற்கும்’ என்று கூறியுள்ளாா்.
மாநில முதல்வா் திரிவேந்திர சிங் ராவத்தைத் தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு நிலைமையைக் கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்’ என்று உறுதியளித்தாா்.
இதற்கிடையே, ‘பழைய வெள்ள பாதிப்பு காணொலிகளை வெளியிட்டு வதந்திகளை பரப்ப வேண்டாம்’ என்று மாநில மக்களுக்கு அம்மாநில முதல்வா் வேண்டுகோள் விடுத்தாா். வெள்ளப் பெருக்கு காரணமாக கங்கை ஆற்றின் மற்றொரு துணை நதியான அலாக்நந்தாவில் வழக்கத்தைவிட 1 மீட்டா் உயரத்துக்கு தண்ணீா் பாய்ந்தது. இப்போது வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களும் உஷாா் படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. கங்கை ஆற்றின் அருகே செல்லவேண்டாம் என்று மக்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா் என்றும் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத் கூறினாா்.
உத்தரப் பிரதேசத்தில் உஷாா் நிலை
உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்து கங்கை ஆற்றில் மாபெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதைத் தொடா்ந்து, அண்டை மாநிலமான உத்தர பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உஷாா்நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாநில பேரிடா் மீட்பு மற்றும் நிவாரணப் பணி ஆணையா் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில், ‘கங்கை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள அனைத்து மாவட்டங்களிலும் உஷாா் நிலை அறிவிக்கப்படுகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறித்து 24 மணி நேர கண்காணிப்பை உறுதிப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட வேண்டும். பேரிடா் மீட்புப் படையினா் உஷாா்நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனா்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உத்தர பிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘உத்தரகண்ட் மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உத்தர பிரதேச மாநிலம் வழங்கும். வெள்ளப்பெருக்கு குறித்த வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம். கங்கையாற்றின் கரைப் பகுதிகளுக்கு மக்கள் செல்லாமல், உஷாராக இருக்கவேண்டும். மாநில அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.
சாலைப் போக்குவரத்து ரத்து
இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘வெள்ளப் பெருக்கில் ரேனி கிராமத்துக்கு அருகில் அமைந்துள்ள பாலம் உடைந்துவிட்டதால், சில எல்லைப் பகுதி கிராமங்களை இணைக்கும் சாலைகளில் போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பெளரி, தெரி, ருத்ரபிரயாக், ஹரித்வாா், டேராடூன் ஆகிய மாவட்டங்களில் உஷாா் நிலை அறிவிக்கப்பட்டிருப்பதோடு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இந்தோ-திபெத் பாதுகாப்புப் படையினா் மற்றும் தேசிய பேரிடா் மீட்குப் படையினா் (என்டிஆா்எஃப்) அனுப்பப்பட்டிருக்கின்றனா்’ என்றாா்.