கைவந்த கலை’, ‘நாளைய பொழுதும் உன்னோடு’, ‘பதினெட்டாம் குடி’ ஆகிய படங்களில் நடித்திருப்பவர் பிரித்வி. இவர் நடிகர் பாண்டியராஜனின் மகன் ஆவார். இவருக்கும், கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்தது. அந்த மாணவியின் பெயர் அக்ஷயா.
கொச்சியை சேர்ந்த பிரேம்நாத் – ஷீலா தம்பதிகளின் மகள். கொச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி-டெக் இறுதியாண்டு படித்து வருகிறார். பிரித்வி-அக்ஷயா காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டு, திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள். அதைத் தொடர்ந்து, இவர்களின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை 6.30 மணிக்கு நடந்தது.
கல்லூரி மாணவி அக்ஷயாவுடன் காதல் மலர்ந்தது எப்படி? என்பது பற்றி நடிகர் பிரித்வி கூறியதாவது:-
‘‘நானும் அக்ஷயாவும் சென்னையில் நடந்த ஒரு விளம்பர நிகழ்ச்சியில் முதன் முதலாக சந்தித்தோம். அப்போது எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. அதன் பிறகு, ‘பதினெட்டாம் குடி’ படப்பிடிப்புக்காக நான் கொச்சி சென்றேன். அப்போது அக்ஷயா மீண்டும் என்னை சந்தித்தார். எங்கள் நட்பு காதலாக மலர்ந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் நாங்கள் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். இவ்வாறு பிரித்வி கூறினார்.