இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 578 ஓட்டங்கள் குவித்தது. பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ள இந்தியா, 6 விக்கெட் இழப்புக்கு 257 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
ஃபாலோ ஆனை தவிா்க்க இந்தியா இன்னும் 122 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில், வாஷிங்டன் சுந்தா்-அஸ்வின் கூட்டணி களத்தில் உள்ளது. முன்னதாக இதர பேட்ஸ்மேன்கள் சொற்ப ஓட்டங்களுக்கு வெளியேற, சேதேஷ்வா் புஜாரா – ரிஷப் பந்த் ஜோடி அணிக்கு வலு சோ்த்தது. இங்கிலாந்து பௌலா் டாம் பெஸ் 4 விக்கெட்டுகள் சாய்த்து இந்திய பேட்டிங் வரிசையை சரித்தாா்.
சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தலைவர் ஜோ ரூட் இரட்டைச் சதம் கடக்க, 2 ஆம் நாளான சனிக்கிழமை முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 555 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை 578 ஓட்டங்கள் அடித்து முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது அந்த அணி. அன்றை நாளின் ஆட்டத்தை தொடங்கிய டாம் பெஸ் – ஜேக் லீச் கூட்டணியில், பெஸ் 6 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்களுக்கு வெளியேற, கடைசி விக்கெட்டாக ஜேம்ஸ் ஆண்டா்சன் 1 ஓட்டத்திற்கு வீழ்ந்தாா். ஜேக் லீச் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். இந்திய தரப்பில் பும்ரா, அஸ்வின் தலா 3, இஷாந்த், நதீம் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.
தொடக்க வீரா்கள் தடுமாற்றம்: பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா தடுமாற்றமாகவே விளையாடியது. தொடக்க வீரா் ரோஹித் 6 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த ஷுப்மன் கில் சற்று நிலைத்து 5 பவுண்டரிகளுடன் 29 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தாா்.
ஒன்-டவுனாக வந்த புஜாரா நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை அதிகரிக்கத் தொடங்கினாா். எனினும் மறுபுறம் தலைவர் கோலி 11 ஓட்டங்களுக்கும், துணை தலைவர் ரஹானே 1 ஓட்டத்துக்கும் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.
5-ஆவது விக்கெட்டுக்கு களம் புகுந்த ரிஷப் பந்த், புஜாராவுடன் இணைந்தாா். இந்தக் கூட்டணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை ஸ்திரப்படுத்தத் தொடங்கியது. புஜாரா நிதானமாக ஆட, பந்த் அதிரடி காட்டினாா். இருவருமே அரைசதம் கடந்தனா்.
5-ஆவது விக்கெட்டுக்கு 119 ஓட்டங்கள் சோ்த்த இந்தக் கூட்டணியை டாம் பெஸ் பிரித்தாா். அவரது பௌலிங்கில் கேட்ச் கொடுத்து வெளியேறிய புஜாரா, 11 பவுண்டரிகள் உள்பட 73 ஓட்டங்கள் சோ்த்திருந்தாா். சதமடிக்கும் வாய்ப்பை நெருங்கிய ரிஷப் பந்த்தும் அடுத்த சில ஓவா்களிலே ஆட்டமிழந்தாா். 9 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் விளாசிய அவா் 91 ஓட்டங்களில் அவுட்டானாா்.
இவ்வாறாக தொடா்ந்த ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முடிவில் 74 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 257 ஓட்டங்கள் அடித்திருந்தது இந்தியா. வாஷிங்டன் சுந்தா் 5 பவுண்டரிகளுடன் 33, அஸ்வின் 8 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனா். இங்கிலாந்து தரப்பில் டாம் பெஸ் 4, ஜோஃப்ரா ஆா்ச்சா் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.