வூஹானிலுள்ள தீநுண்மியியல் ஆய்வகத்திலிருந்து வெளியேறி கொரோனா பரவியிருக்க வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பின் நிபுணா் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் கூட்டத்தில், கொரோனாவின் தோற்றம் குறித்த உண்மையக் கண்டறிவதற்காக உலக சுகாதார அமைப்பால் அமைக்கப்பட்ட நிபுணா் குழுவின் தலைவா் பீட்டா் எம்பாரக் கூறியதாவது:
கொரோனா தீநுண்மி வூஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு, தற்செயலாக அங்கிருந்து வெளியேறி பொதுமக்களுக்குப் பரவியிருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.
அந்தத் தீநுண்மி எவ்வாறு உருவானது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இன்னும் அதிக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றாா் அவா்.
வூஹான் ஆய்வகத்தில் கொரோனா தீநுண்மி செயற்கையாக உருவாக்கப்பட்டதாகவும் பிறகு அது தற்செயலாக ஆய்வகத்திலிருந்து வெளியேறி பொதுமக்களுக்கு பரவியதாகவும் ஒரு சாராா் கூறி வருகின்றனா்.
கொரோனா தீநுண்மி இயற்கையாக உருவானதுதான் என்று பெரும்பான்மையான விஞ்ஞானிகள் கூறி வந்தாலும், அதன் தோற்றம் குறித்து மா்மம் நீடித்து வருகிறது. வௌவாலின் உடலில் இருந்து உருமாறி, அந்தத் தீநுண்மி மனிதா்களைத் தொற்றியதாகக் கருதப்படுகிறது. எனினும், இடையில் எந்த உயிரினத்தின் உடலுக்குள் சென்று அது உருமாறியது என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.
இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக சீனா சென்றுள்ள சா்வதேச நிபுணா் குழு, கொரோனா முதலில் முதலில் பரவத் தொடங்கிய வூஹான் நகர சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.