சென்னை டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கான காரணத்தை தலைவர் விராட் கோலி விளக்கியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 578 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து ஆடத் தொடங்கிய இந்தியா, 337 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் 241 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து ஃபாலோ ஆன் வாய்ப்பு வழங்காமல் 2 ஆவது இன்னிங்ஸை ஆடியது.
அஸ்வின் சுழலில் சுருண்ட இங்கிலாந்து 178 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதை அடுத்து 420 என்ற கடினமான இலக்கை நோக்கி 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 58.1 ஓவர்களில் 192 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் சென்னை டெஸ்டை 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
ஆட்டம் முடிந்த பிறகு இந்திய தலைவர் விராட் கோலி கூறியதாவது:
முதல் பாதியில் பந்துவீச்சில் இங்கிலாந்து அணிக்குத் தேவையான அழுத்தத்தை நாங்கள் தரவில்லை என எண்ணுகிறேன். வேகப்பந்து வீச்சாளர்களும் அஸ்வினும் முதல் இன்னிங்ஸில் நன்கு பந்துவீசினார்கள். சில ரன்களைக் கட்டுப்படுத்தி அவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இங்கிலாந்து அணிக்குப் பாராட்டுகள். முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோரை எடுத்தார்கள். மிகவும் தொழில்முறையுடன் இங்கிலாந்து அணி விளையாடியது. உங்களுடைய பந்துவீச்சுக் குழு, ஒட்டுமொத்தமாக நன்குப் பங்களித்திருக்க வேண்டும். ஆட்டத்திறனைச் சரியாக வெளிப்படுத்தாததைப் புரிந்துகொள்கிறேன். நாங்கள் எப்போதும் கற்றுக்கொள்ளும் அணியாகவும் உள்ளோம். தோல்வியிலிருந்து மீண்டு வருவது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும் என்றார்.
2 வது டெஸ்ட் சென்னையில் பிப்ரவரி 13 அன்று தொடங்குகிறது.