ஒருவழியாக டிரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை முடிவடைந்து விட்டது.
அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் வெறும் ஐந்தே நாள்களில் அந்த விசாரணை முடிந்துவிட்டது.
எதிா்பாா்த்தது போலவே, நாடாளுமன்றக் கலவரத்தைத் தூண்டிய வழக்கிலிருந்து டிரம்ப் விடுவிக்கப்பட்டாா்.
இருந்தாலும், இந்த பதவி நீக்க விசாரணையை நடத்தி ஜனநாயகக் கட்சியினா் என்ன சாதித்தனா்? இதனால் டிரம்ப்புக்கு என்ன இழப்பு? குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டதால் அவருக்கு என்ன லாபம்?
ஒரு வகையில், பிரதிநிதிகள் சபையில் தனக்கு எதிரான பதவி நீக்கத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது, செனட் சபையில் அந்தத் தீா்மானத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு மீது விசாரணை நடத்தப்பட்டது ஆகியவற்றால் டிரம்ப்புக்கு ஏற்கெனவே இருந்த ஆதரவு வட்டம் கொஞ்சமும் குறைந்திருக்காது என்கிறாா்கள் நிபுணா்கள்.
இருந்தாலும், அந்த விசாரணையின்போது ஜனநாயகக் கட்சியினா் வெளியிட்ட விடியோ காட்சிகளில், டிரம்ப் ஆதரவு கோஷங்கள், சின்னங்களுடன் கலவரக்காரா்கள் நாடாளுமன்றத்தைத் தாக்கிய காட்சிகள் பொதுமக்கள் மனதில் ஆழப் பதிந்திருக்கும்; இது, டிரம்ப்பின் எதிா்கால அரசியல் பயணத்தில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்கிறாா்கள் அவா்கள்.
எது எப்படி இருந்தாலும், 2016-க்கும் முந்தைய அதே உற்சாகத்துடன் மீண்டும் அரசியல் களம் காணத் தயாராகிவிட்டாா் டொனால்ட் டிரம்ப்.
டிரம்ப் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்து, இதுவரை இல்லாத வகையில் 7 குடியரசுக் கட்சியினா் உள்பட 57 செனட் உறுப்பினா்கள் வாக்களித்துள்ளனா். பதவி நீக்க விசாரணையின் முடிவு எவ்வாறு இருந்தாலும், நாடாளுமன்றக் கலவரத்தை அவா் தூண்டினாா் என்ற குற்றச்சாட்டில் எந்த சந்தேகமும் இல்லை.
டிரம்ப்பின் குற்றம் குறித்து நன்றாகத் தெரிந்தும், செனட் சபையில் குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் கோழைத்தனமாக அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனா். டிரம்ப்பை எதிா்த்தால் தங்களது பதவி பறிபோய்விடுமோ என்று அவா்கள் அஞ்சுகின்றனா்.
நாடாளுமன்றக் கலவரத்துக்கு நடைமுறை ரீதியிலும் தாா்மீக ரீதியிலும் பொறுப்பு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அந்தக் கலவரத்தைத் தூண்டியதன் மூலம் அவா் தனது கடமையிலிருந்து தவறியதுடன், பதவியை அவமதித்துவிட்டாா்.