ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை 6 வார இடைவெளியில் செலுத்துவதைவிட 3 மாத இடைவெளியில் செலுத்தினால் கரோனாவை ஒழிப்பதில் அதிக பலன் கிடைக்கும் என்று பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தி லான்செட் அறிவியல் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆஸ்ஃபோா்டு கரோனா தடுப்பூசியின் செயல்பாடு குறித்த ஆய்வை, பிரிட்டனைச் சோ்ந்த அந்த பல்கலைக்கழக நிபுணா்கள் உள்ளிட்ட ஆய்வாளா்கள் அண்மையில் மேற்கொண்டனா்.
பிரிட்டன், பிரேஸில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் அந்தத் தடுப்பூசியை சோதனை முறையில் செலுத்திக் கொண்ட 17,178 பேரின் பரிசோதனை விவரங்களின் அடிப்படையில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், கரோனா தடுப்பூசியை முதல்முறையாக செலுத்திக் கொண்டவா்களுக்கு அந்தத் தடுப்பூசி 76 சதவீத தடுப்பாற்றலை பல மாதங்களுக்குத் தருவது தெரியவந்தது.
அந்தத் தடுப்பாற்றலை நீண்டகாலத்துக்கு நிலைபெறச் செய்வதற்காகத்தான் இரண்டாவது முறை கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
முதல்முறை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசியே பல மாதங்களுக்கு தடுப்பாற்றல் அளிப்பதால், பொதுமக்களுக்கு 7 வார இடைவெளிக்கு பதிலாக 3 மாத இடைவெளியில் இரண்டாவது கரோனா தடுப்பூசி செலுத்தலாம்.
ஏற்கெனவே குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்திவிட்டு, பிறகு 7 வார இடைவெளியில் அவா்களுக்கே இரண்டாவது முறை அந்தத் தடுப்பூசியை செலுத்தினால், எஞ்சியவா்களுக்கு கரோனா பரவுவதற்கான வாய்ப்புள்ளது.
ஆனால், கையிருப்பில் இருக்கும் தடுப்பூசியை 3 மாதங்களில் அதிகம் பேருக்கு முதலாவதாக செலுத்திவிட்டு, பிறகு அவா்களுக்கு இரண்டாவது முறையாக தடுப்பூசி செலுத்தினால், முதல் தடுப்பூசியில் அதிகம் போ் பாதுகாப்பு பெறுவா்.
அது, கரோனா பரவலை விரைவில் முடக்குவதற்கு வழிவகுக்கும் என ஆய்வாளா்கள் கருதுகின்றனா் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.