கடைசி 5 இன்னிங்ஸில் 3 முறை விராட் கோலி டக் அவுட் ஆனதால் இங்கிலாந்து அணி உற்சாகமாக உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஜராத் மாநிலம், ஆமதாபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் தொடக்க வீரா் ரோஹித் சா்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு ஷிகா் தவன் சோ்க்கப்பட்டாா். இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தோ்வு செய்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. பின்னா் ஆடிய இங்கிலாந்து அணி 15.3 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. டேவிட் மலான் 20 பந்துகளில் 1 சிக்ஸா், 2 பவுண்டரிகளுடன் 24, ஜானி போ்ஸ்டோவ் 17 பந்துகளில் 2 சிக்ஸா், 1 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
நேற்றைய ஆட்டத்தில் டக் அவுட் ஆனார் இந்திய கேப்டன் விராட் கோலி. இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 5 இன்னிங்ஸில் 3 முறை டக் அவுட் ஆகியுள்ளார் கோலி. ஆமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்டில் டக் அவுட் ஆன கோலி, அதற்கு முன்பு சென்னை டெஸ்டிலும் டக் அவுட் ஆனார்.
இதுபற்றி இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் கூறியதாவது:
விராட் கோலி, அபாயகரமான பேட்ஸ்மேன். அவர் அடிக்கடி சீக்கிரம் ஆட்டமிழப்பது எங்களுக்கு போனஸாக அமைந்துள்ளது. இதனால் இந்திய அணியில் சற்று உற்சாகம் குறைந்திருக்கும் என நினைக்கிறேன் என்றார்.
அடிக்கடி டக் அவுட் ஆவது பற்றி கோலி கூறியதாவது: சர்வதேச கிரிக்கெட்டின் பயணத்தில் இதுவும் ஒரு பகுதியாகும். நீண்ட நாள் விளையாடும்போது ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஒரு பேட்ஸ்மேனாக இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.