ஏழை, எளிய மக்கள் தொழில் தொடங்க ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய உரை :
ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்கள். கல்லூரி உட்பட பல்வேறு திட்டங்களை கொடுத்தார்கள். வறண்ட பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்களில் எல்லாம், நீரேற்று முறையில் தண்ணீர் நிரப்பும் திட்டத்தினை வகுத்து வருகின்றோம்.
இதன் மூலம் விவசாயத்திற்கும், குடிநீர்க்கும் தேவையான நீர் கிடைக்கும். ஏழை, எளிய குழந்தைகளுக்கு கல்விகற்ற அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம்.
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் என ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம்.
அதிமுக சார்பாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மக்களின் வாழ்வாதாரம் சிறக்க ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 6 கேஸ் சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும்.
அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வாஷிங் மெஷின் வழங்கப்படும். விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 6 சவரனுக்கும் குறைவாக அடமானம் வைத்து பணம் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
அனைத்து இல்லங்களுக்கும் கேபிள் இணைப்பு கட்டணமில்லாமல் வழங்கப்படும். 18 வயது நிரம்பியவர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு லைசென்ஸ் வழங்கப்படும். குடும்ப அட்டை ஒவ்வொன்றிற்கும் மாதந்தோறும் ரூபாய் 1,500 வழங்கப்படும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும். ஏழை, எளிய மக்கள் தொழில் தொடங்க ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் வீடுதேடி வந்து வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.