கணவரின் குடும்ப வன்முறைக்கு எதிராக பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல ஹாலிவுட் தம்பதிகள் நடிகர் பிராட் பிட் மற்றும் நடிகை ஏஞ்சலினா ஜோலி. இவர்களுக்குத் தத்தெடுத்துக் கொள்ளப்பட்ட குழந்தைகளுடன் சேர்ந்து மொத்தம் ஆறு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இருவருக்கும் இடையையே நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் கணவரின் குடும்ப வன்முறைக்கு எதிராக ஏஞ்சலினா ஜோலி ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் பிரபல வார இதழ் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியில் சட்ட நிபுணர் ஒருவரின் கருத்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அவருக்கு நிகழ்ந்த குடும்ப வன்முறைக்கு எதிராக ஏஞ்சலினா ஜோலியிடம் ஆதாரங்கள் இருந்தால், அவர் அதனை அவர் விவாகரத்து வழக்கு விசாரணையில் துணை மனுவாகத் தாக்கல் செய்யலாம்.
ஏற்கனவே தாக்கல் செய்துள்ள ஆதாரங்களுடன் கூடுதலாக இதை அவர் தாக்கல் செய்கிறார் என்றால், இந்தசம்பவங்கள் சமீபத்தில் நடந்திருக்கலாம் அல்லது ஏற்கனவே நிகழ்ந்துள்ள சம்பவங்களுக்கான தற்போதைய ஆதாரமாக இருக்கலாம்.
இந்த விஷயத்தில் அவரது ஆறு குழந்தைகளும் நீதிமன்றத்தில் சுதந்திரமாக தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த நடவடிக்கையானது பிராட் பிட்டினை வருத்தம் கொள்ள செய்வதற்கான ஏஞ்சலினா ஜோலியின் முயற்சி என்றும், முன்னரும் அவர் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார் என்றும், பிராட் பிட்டிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.