இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு சதம் அடித்தால் சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன் செய்து, ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடிப்பார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக 41 சதங்களை அடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக 41 சதங்களை அடித்து பாண்டிங்குடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார்.
இதுபோல இந்திய மண்ணில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 20 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி இதுவரை சொந்த மண்ணில் 19 சதங்கள் அடித்துள்ளார்.
இதன்மூலம், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில் கேப்டனான ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்துவிடுவார். இந்தியாவில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன் செய்துவிடுவார்.
இங்கிலாந்துடனான டி20 தொடரில் கோலியின் பேட்டிங் நல்ல நிலையில் இருந்ததால், ஒருநாள் தொடரிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 சாதனைகளையும் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.