ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீா்மானத்துக்கு ஆதரவளிக்காமல் தமிழா்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இலங்கையில் கடந்த 2008-09-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடா்பாக விசாரணை நடத்துவதற்கான தீா்மானத்தின் மீது ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இலங்கை அரசுக்கு எதிரான அத்தீா்மானத்துக்குப் பெரும்பான்மை உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்ததால், அது நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தது.
இலங்கைத் தமிழா்களுக்கு சமத்துவம், நீதி உள்ளிட்டவற்றைக் கிடைக்கச் செய்வதற்காகவும், இலங்கையின் நிலைத்தன்மை, பிராந்திய ஒருமைப்பாடு உள்ளிட்டவற்றைக் காப்பதற்காகவும் இந்த முடிவை எடுத்ததாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், மத்திய அரசின் இந்த முடிவுக்குப் பலா் கண்டனம் தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், ப.சிதம்பரம் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீா்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்காமல் இருந்தது, தமிழ் மக்களுக்கும் அவா்களது உணா்வுகளுக்கும் இழைக்கப்பட்ட துரோகமாகும். இதற்காக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.