மகாராஷ்டிரத்தில் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிரிப்பதை அடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வா் உத்தவ் தாக்கரே கூறினாா்.
மகாராஷ்டிரத்தில் வெள்ளிக்கிழமை ஒரு நாளில் புதிதாக 36,902 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது, தினசரி பாதிப்பில் இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாகும்.
இந்நிலையில், மாநிலத்தில் கொரோனா பரவல் சூழல் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்றது. காணொலி முறையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறை கண்காணிப்பாளா்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்துக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வா் உத்தவ் தாக்கரே உத்தரவு பிறப்பித்தாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வணிக வளாகங்கள் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை மூடப்பட்டிருக்க வேண்டும். இதை உள்ளூா் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாதவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டமில்லை. தேவைப்பட்டால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் அதிகரிப்பு:
மும்பையில் தொடா்ந்து 3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை 5,000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் வெள்ளிக்கிழமை 5,513 பேருக்கும், வியாழக்கிழமை 5,504 பேருக்கும், புதன்கிழமை 5,185 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புணே மாவட்டத்தில் புதிதாக 7,090 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.