நடிகர் சந்தானம், கொரோனா தடுப்பூசியைத் தனியார் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டாா்.
கொரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அவசரகால ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது. இதையடுத்து, நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கும் முன்களப் பணியாளா்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இத்தகைய சூழலில், நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோா், இணைநோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை (மார்ச் 26) காலை 7 மணி வரை 5.5 கோடிக்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் சந்தானம், கொரோனா தடுப்பூசியைத் தனியார் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டுள்ளார். இதுபற்றி ட்விட்டரில் நடிகர் எஸ்.வி. சேகர் கூறியதாவது:
´´நான் எடுத்த படம். லட்சக்கணக்கான ரசிகர்களை சிரிக்க வைக்கும் கலைஞன் சந்தானம், சிரித்தபடி கோவிஷீல்ட் முதல் தவணையைப் போட்டுக்கொள்ளும் போது எடுத்தேன்´´ என்று கூறி புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.