இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான் வரிசையில் சுப்ரமணியம் பத்ரிநாத்துக்கும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் பத்ரிநாத் பதிவிட்டுள்ளது: “நான் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வருகிறேன். முறையாக பரிசோதனைகளும் மேற்கொண்டு வருகிறேன். இருந்தபோதிலும் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளும் உள்ளன. நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு, அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். எனது மருத்துவர் அறிவுரையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன்.
கடந்த சனிக்கிழமை சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த சாலைப் பாதுகாப்பு உலக தொடருக்கான இந்திய ஜாம்பவான்கள் அணியில் சச்சின், பதானுடன் இணைந்து பத்ரிநாத்தும் இடம்பெற்றிருந்தார்.
இந்த நிலையில், பத்ரிநாத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.