மீன் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட், 5 டி20 ஆட்டங்களில் விளையாடிய இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆா்ச்சா், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பினார்.
இந்நிலையில் ஆர்ச்சரின் கையில் நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதுபற்றி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் ஆஷ்லி கைல்ஸ் ஒரு பேட்டியில் கூறியதாவது:
இது ஒரு மோசமான சதி போல உங்களுக்குத் தோன்றலாம். தன்னுடைய வீட்டில் மீன் தொட்டியை ஆர்ச்சர் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது அது அவருடைய கையில் விழுந்து, காயத்தை ஏற்படுத்திவிட்டது. இதையடுத்து ஆர்ச்சருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. கைக்குள் சிறிய கண்ணாடித் துண்டு இருந்ததால் அறுவை சிகிச்சை செய்து அதை வெளியே எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்போது சர்வதேசப் போட்டிகளும் இல்லை என்பதால் அறுவை சிகிச்சை செய்வது என முடிவெடுக்கப்பட்டது. அவருடைய முழங்கை காயத்தைக் கவனமாக கையாள வேண்டியுள்ளது. அவரை நாங்கள் நன்குக் கவனித்துக்கொள்ள வேண்டும். ஆர்ச்சர் விரைவில் ஆடுகளத்துக்குத் திரும்புவார் என நம்புகிறோம் என்றார்.