ஆபாச வலைதளங்களை தேடுபவர்களுக்கு ஆறுமாத சிறை தண்டனையுடன் 10 லட்சம் திர்ஹம் அபராதமும் விதிக்கப்படும் என ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, அபுதாபி அரசின் நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையதளங்களில் ஆபாசப்படங்களை பதிவேற்றம் செய்த ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் நாட்டில் இருந்தோ, வெளிநாடுகளில் இருந்தோ அபுதாபியில் வசிக்கும் சிறுவர்-சிறுமியரை குறிவைத்து நடத்தப்படும் இதைப்போன்ற குற்றச்செயல்களை கண்டுபிடிக்கும் நவீன தொழில்நுட்பம் அபுதாபி அரசிடம் உள்ளது. இதைப்போன்ற கடுமையான குற்றங்களை இந்த அரசு சகித்துக் கொள்ளாது.
இண்டர்நெட் மூலம் இணையதளங்களில் ஆபாசப்படங்களை பதிவேற்றம் செய்பவர்கள், ஆபாசப் படங்கள் தொடர்பான தகவல்களை தேடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வகையில், கைது செய்யப்படும் நபர்களுக்கு ஆறுமாத சிறை தண்டனையுடன் ஒரு லட்சத்து 50 ஆயிரம் திர்ஹம் முதல் பத்து லட்சம் திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய்) அபராதமும் விதிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.