மு.க. ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை பதவியேற்கும் அமைச்சரவையில் யார், யார் இடம்பெறுவார்கள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்தம் 34 பேர் தமிழக அமைச்சரவையில் இடம்பெறுகிறார்கள்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.கவை ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அழைப்பு விடுத்துள்ளார். மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்தப் புதிய அரசு, வெள்ளிக்கிழமை (மே 7) காலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எளிய விழாவில் பதவியேற்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மு.க. ஸ்டாலினுடன் பதவியேற்கும் அமைச்சர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
மு. ஸ்டாலின்:- முதல்வர்
பொது நிர்வாகம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., காவல்துறை, மாவட்ட வருவாய் அலுவலர்கள், உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்புத் திட்ட அமலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன்
துரைமுருகன்:- நீர் வளத்துறை
(சிறுபாசனம் உள்ளிட்ட பாசன திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்)
கே.என். நேரு: நகர்ப்புள வளர்ச்சித்துறை
(நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்)
ஐ.பெரியசாமி:கூட்டுறவுத்துறை
(கூட்டுறவு, புள்ளியியல், முன்னாள் ராணுவத்தினர் நலன்)
கே. பொன்முடி:உயர்கல்வித்துறை
(உயர்கல்வி உள்ளிட்ட தொழிற்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்)
எ.வ. வேலு – பொதுப் பணிகள்
(பொதுப்பணிகள் (கட்டடங்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள், கரும்பும்ப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு)
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்:-வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை(வேளாண்மை – உழவர் நலத்துறை
(வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண் பணிக்கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத்தீர்வை)
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்:-வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
(வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை )
தங்கம் தென்னரசு:- தொழிற்துறை
(தொழிற்துறை, ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை, தொல்பொருள்)
எஸ். இரகுபதி:- சட்டத்துறை
(சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம்)
சு. முத்துச்சாமி:-வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை
(வீட்டுவசதி, ஊரக வீட்டு வசதி, நகரமைப்புத் திட்டமிடல், வீட்டு வசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு நகர திட்டமிடல், நகர்ப்பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்)
கே.ஆர். பெரிய கருப்பன்:- ஊரக வளர்ச்சித்துறை
(ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரக கடன்கள்)
தா.மோ. ஆன்பரசன்:-ஊரக தொழிற்துறை
(ஊரக தொழில்கள், குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள், குடிசை மாற்று வாரியம்)
மு.பெ. சுவாமிநாதன்:- செய்தித்துறை
(செய்தி மற்றும் விளம்பரம், திரைப்பட தொழில்நுட்பவியல் மற்றும் திரைப்படச்சட்டம், பத்திரிகை அச்சுக்காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்)
கீதா ஜீவன்:- சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை
(மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் உள்ளிட்ட சமூக நலம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்ப இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத்திட்டம்)
அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்:-மீன் வளத்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை
(மீன் வளம் மற்றும் மீன் வளர்ச்சிக்கழகம் கால்நடை பராமரிப்பு)
ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்:- போக்குவரத்துத் துறை
(போக்குவரத்து, நாட்டுடைமையாக்கப்பட்ட மற்றும் இயக்கூர்தி சட்டம்)
கா. ராமச்சந்திரன்:- வனத்துறை
அர. சக்ரபாணி:- உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை
(உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு)
வி. செந்தில் பாலாஜி:- மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை
(மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்))
ஆர். காந்தி:- கைத்தறி மற்றும் துணி நூல்
(கைத்தறி மற்றும் துணி நூல், கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்)
மா. சுப்ரமணியன்:-மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு
(மக்கள் நல்வாழ்வு, மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலன்)
பி. மூர்த்தி:- வணிகவரி மற்றும் பதிவுத்துறை
(வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு)
எஸ்.எஸ். சிவசங்கர்:- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
(பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர்)
பி.கே. சேகர் பாபு:-இந்து அறநிலையத் துறை
பழனிவேல் தியாகராஜன்:-நிதி மற்றும் மனிதவளத் துறை ( நிதித்துறை, திட்டம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம், அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகள்)
சா.மு. நாசர்:-பால்வளத் துறை (பால் வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி)
செஞ்சி கே.எஸ். மஸ்தான்:-சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை
(சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வக்ஃபு வாரியம்)
அன்பில் மகேஷ் பொய்யாமொழி:-பள்ளிக் கல்வித் துறை
சிவ.வீ. மெய்யநாதன்:-சுற்றுச்சூழல் ,காலநிலை மாற்றம், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை (சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை)
சி.வி. கணேசன்:-தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு
(தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு)
மனோ தங்கராஜ்:- தகவல் தொழில்நுட்பத்துறை
மதிவேந்தன்:- சுற்றுலா துறை
என். கயல்விழி செல்வராஜ்:-ஆதிதிராவிடர் நலத்துறை
(ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் நலன்)
34 பேரைக் கொண்ட இந்த அமைச்சரவையில் 2 பெண்களும் 2 சிறுபான்மையினரும் இடம்பெற்றுள்ளனர். நிதித்துறை அமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் பழனிவேல் தியாகராஜன், சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவியேற்கும் மா. சுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் முதன்முறையாக அமைச்சரவையில் பங்கேற்கின்றனர்.
அமைச்சகங்களின் பெயர் மாற்றம் ஏன்?
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவிருக்கும் புதிய அமைச்சரவையில் சில துறைகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அதற்கான காரணத்தை விளக்கிகி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
“தமிழகத்தில் உள்ள அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் இன்றுள்ள சூழலில் மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, பணியாளர்களுடைய நலன், எதிர்கொள்ளும் சவால்கள், நிர்ணயிக்கப்படும் இலக்குகள், அரசின் லட்சியங்கள் ஆகியவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சில அமைச்சகங்களின் பெயர்களையும், துறைகளின் பெயர்களையும் தொலைநோக்குப் பார்வையோடு மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
1. தமிழகத்தின் நீர்த் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு உண்டாக்கப்படும் தனி அமைச்சகம் ´நீர்வளத் துறை´ என்று அழைக்கப்படும். இத்துறை தமிழகத்தில் தங்கு தடையின்றி உழவர்களுக்கு நீர் கிடைப்பதற்கும், நிலத்தடி நீரை விருத்தி செய்வதற்கும், நீர்நிலைகளைத் தூர்வாரி பராமரிப்பதற்கும், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் முக்கியத் துறையாகச் செயல்படும். மற்ற துறைகளை ஒருங்கிணைக்கும் மையப்புள்ளியாக இது இருக்கும்.
2. வேளாண்மைத் துறை என்கிற அமைச்சகம் ´வேளாண்மை – உழவர் நலத்துறை´ என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அரசின் நோக்கம் சாகுபடியைப் பெருக்குவது மட்டும் அல்ல, நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி நெற்கதிர்களை அறுவடை செய்யும் உழவர்களுடைய நலன்களையும் பேணிக் காப்பது என்கிற தொலைநோக்குப் பார்வையையும், திட்டங்களையும் உள்ளடக்கியதாக இத்துறை செயல்படும்.
3. சுற்றுச்சூழல் துறை என்கிற அமைச்சகம் ´சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத் துறை´ என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தொடர்பான எச்சரிக்கைகளையும், ஆயத்த நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு பரப்புரைகளையும், கட்டமைப்புகளையும் இந்த அமைச்சகம் செயல்படுத்தும்.
4. மக்கள் நல்வாழ்வுத் துறை என்பது மருத்துவத்தையும் உள்ளடக்கியது என்பதாலும், சுகாதாரம் என்பது துப்புரவை மட்டுமே குறிப்பது என்பதாலும் அத்துறைக்குப் பரந்துபட்ட நோக்கத்தில் ´மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை´ என்று பெயர் சூட்டப்படுகிறது.
5. மீனவர்கள் நலமில்லாமல் மீன்வளத்தைப் பெருக்கி பயனில்லை என்பதாலும், மீனவர்களுடைய நல வாழ்விற்கான திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையாலும் மீன்வளத்துறை ´மீன்வளம் – மீனவர் நலத்துறை´ என்று அழைக்கப்படுகிறது.
6. தொழிலாளர் நலத்துறையின் செயல்பாடுகள் காலப்போக்கில் மாறி இன்று திறன்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. எனவே அத்துறை ´தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை´ என்று பெயரிடப்படுகிறது.
7. செய்தி – மக்கள் தொடர்புத் துறை ´செய்தித் துறை´யாக உருமாற்றம் அடைகிறது. செய்தி என்பதிலேயே அத்துறையின் செயல்பாடான மக்கள் தொடர்பும் அடங்கியிருக்கிறது.
8. சமூக நலத்துறை என்பது பெண்களுக்கு உரிமை வழங்குகிற பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய துறை. எனவே அதைக் குறிக்கும் பொருட்டும், அந்தத் திக்கில் செயல்படும் பொருட்டும் திட்டங்களைத் தீட்டும் நோக்கத்திலும் ´சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை´ என்று வழங்கப்படவுள்ளது.
9. பணியாளர் என்கிற பதம் இன்று மேலாண் வட்டத்தில் அவர்களைப் பாரமாகக் கருதும் போக்கைச் சுட்டிக்காட்டுவதால் மனித வளமாகவே மதிக்கப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ´மனித வள மேலாண்மைத் துறை´ என்று அழைக்கப்பட உள்ளது.
10. வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்கிற துறை வெளிநாடு வாழ் தமிழர் நலன் என்று என்று பெயர் மாற்றம் அடைகிறது. உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுடனான தாயகத் தமிழர்களின் உறவை மேம்படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழ்க் குடும்பங்களிடமும் அவர்கள்தம் வருங்கால தலைமுறையினரிடமும் தமிழைக் கொண்டுசேர்த்து வளப்படுத்தும் நோக்கத்துடன் இப்பெயர் மாற்றம் நடைபெற உள்ளது. இனித் தமிழும் தமிழகமும் வெல்லும்.
உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த செயல்பாடுகளை மனத்தில் வைத்தும், தமிழக அரசு ´உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்´ என்கின்ற சிறந்த நோக்கத்தின் அடிப்படையிலும் இந்தப் பெயர் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவை வெறும் பெயர் மாற்றமாக இல்லாமல் செயல்பாட்டிலும் மிகப் பெரிய மாற்றங்களைத் திட்டங்களாகக் கொண்டு செயல்படத் தூண்டுகோல்களாக இருக்கும்”.