அமீர் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான படம் பருத்திவீரன். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. மேலும் நடிகர் கார்த்தி இப்படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமானார்.
இப்படத்தில் நடிகர் கார்த்தியின் அப்பத்தாவாக நடித்திருந்தவர் பஞ்சவர்ணம். அவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பஞ்சவர்ணம், நேற்று காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.