தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கிடைத்த தோல்வி, நிர்வாகிகள் விலகல் என சோதனையான சூழலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சிக்கித் தவிக்கிறது. ஆனாலும், நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், கருத்துகளைக் கேட்பது என உற்சாகத்துடன் கமல் வலம் வருகிறார். என்ன நடக்கிறது ம.நீ.மவில்?
தமிழக சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. இதில், கூட்டணிக் கட்சிகளுக்குத் தலா 40 இடங்களை கமல்ஹாசன் ஒதுக்கினார். இது மூன்றாவது அணி அல்ல, முதல் அணி என்றே பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கமும் கொடுத்தார். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 3.7 சதவிகித வாக்குகளைப் பெற்ற மக்கள் நீதி மய்யம், இந்தத் தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெறும் என அரசியல் விமர்சகர்கள் பேசி வந்தனர்.
இதன்பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், `சென்னையில் கமல் போட்டியிடுவார்´ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோவை தெற்குத் தொகுதியில் அவர் களமிறங்கினார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பாக மயூரா ஜெயக்குமாரும் பா.ஜ.க சார்பில் வானதி சீனிவாசனும் களமிறங்கினர். இதில் வாக்கு எண்ணிக்கை முடியும் வரையில் இழுபறியே நீடித்ததால் கமல் உறுதியாக வெல்வார் என அக்கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் கமலுக்கு 51,087 வாக்குகள் கிடைத்தன. மேலும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியை தழுவினர். ம.நீ.மவின் வாக்கு சதவிகிதமும் 2.8 ஆக குறைந்தது. அதேநேரம், நாம் தமிழர் கட்சி 6.6 சதவிகித வாக்குகளைப் பெற்றது, அரசியல் அரங்கில் கவனத்தைப் பெற்றது.
இதன்பின்னர், மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளராக இருந்த கமீலா நாசர் கட்சியில் இருந்து வெளியேறினார். `குடும்பச் சூழல் காரணமாக விலகுகிறேன்´ என அவர் கூறியிருந்தாலும், `விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட சீட்டை எதிர்பார்த்தார். அந்தத் தொகுதியை கவிஞர் சிநேகனுக்கு ஒதுக்கியதால் அதிருப்தியடைந்து வெளியேறினார்´ எனவும் தகவல் வெளியானது. தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரனும் கட்சியில் இருந்து வெளியேறினார். மேலும், ம.நீ.மவின் நிர்வாகக் குழுவில் இருந்த பலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், தொண்டர்களுக்கு நேற்று கடிதம் ஒன்றை கமல்ஹாசன் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், ` மக்கள் நீதி மய்யம் அமைக்கப்பட்டது, அரசியலை வியாபாரமாக்கிய இன்றைய அரசியலில் இருப்பவர்களுக்கு இன்னொரு கட்சியாக அல்ல. சீரழிந்துள்ள அரசியலில் ஒதுக்கப்பட்டுப் புக முடியாமல் இருக்கும் வர்க்கங்கள், இளைஞர்கள், மகளிருக்காகத் தொடங்கப்பட்டது அது. எனவே, அரசியலை வியாபாரமாகப் பார்க்காமல் கடமையாகப் பார்ப்பவர்கள் மட்டுமே இக்கட்சியில் தங்கி செழிக்க முடியும். மநீமவின் இந்த நிலை வெற்றி எனும் பட்டியலில் சேராது எனினும், அந்தப் பாதையில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பது உறுதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அந்த அறிக்கையில், ` நான் போட்டியிட்ட கோவை தெற்குத் தொகுதியை எடுத்துக்கொள்ளுங்கள். என் சொந்தச் சம்பாத்தியத்தில் செலவு செய்த அந்தத் தொகை எனக்குப் பெரிது. ஆனால், நம்முடன் களம் கண்ட போட்டியாளர்கள் செலவை ஏணி வைத்தால்கூட அது எட்டாது. அப்படி இருந்தும் மும்முனைப் போட்டி இருந்த தொகுதியில் 33 விழுக்காடு மக்கள் நம்மை மதித்து வாக்களித்துள்ளார்கள். வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகள் வாங்காத மக்கள் நீதி மய்யம் 33 விழுக்காடு வாக்குகள் பெற்றுள்ளதென்பதை நாம் பெருமையுடன் சொல்லிக்கொள்ள முடியும்.
இன்னும் இரண்டாயிரம் பேர் வாக்களித்திருந்தால், சரித்திரம் சற்றே மாறியிருக்கும். எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் அந்த 33 விழுக்காடு மக்கள் நம் பக்கம் இருந்தார்கள். தொடர்ந்து இருப்பார்கள். இதுபோன்று எல்லா தொகுதிகளும் ஆகமுடியும். நாம் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும். சாதனை என்பது சொல் அல்ல, செயல்´ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், `உங்களை எல்லாம் நேரில் சந்திக்கத் துடிக்கிறேன். ஆனால், இப்போது பொது ஊரடங்கு இருப்பதால் அது சாத்தியம் அல்ல. எனவே, மக்கள் சங்கடங்கள் குறையட்டும், ஓயட்டும். மீண்டும் நாம் சந்திப்போம், சிந்திப்போம், கலந்துரையாடுவோம், எதிர்காலப் பயணத்தைத் திட்டமிடுவோம். அதற்குள் உங்கள் மனதில் உள்ளதை எனக்கு மின்னஞ்சல் (email) செய்யுங்கள். உங்கள் ஒவ்வொருவருடைய சிந்தனையும் எனக்கு முக்கியமானது, கட்சிக்கு மகத்தானது. எனவே தவறாது உங்கள் சிந்தனைகளை எழுத்தில் அனுப்புங்கள்´ எனத் தெரிவித்துள்ளார்.
`கமலின் எதிர்கால திட்டம்தான் என்ன?´ என மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். “ ஊடகங்களிடம் பேச வேண்டாம் என தலைமை உத்தரவிட்டுள்ளது. எனவே, இதுகுறித்து இப்போதைக்கு என்னால் பேச முடியாது” என்றார். இதையடுத்து, ம.நீ.ம நிர்வாகிகள் சிலரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். “ தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்கள் எனப் பலரிடமும் கமல் கருத்து கேட்டு வருகிறார். இந்தச் சூழலில் கட்சியில் இருந்து மகேந்திரன் விலகிய விவகாரம் வெடித்தது. தற்போதைய சூழலில், கட்சியை சீரமைப்பதை முதல் வேலையாகப் பார்க்கிறார். அதையொட்டி, மண்டலவாரியாக நிர்வாகிகளுடன் ஜூம் செயலியில் பேசி வருகிறார்.
அந்த உரையாடல்களின்போது, `நான் சோர்வடையவில்லை. அடுத்தகட்டத்துக்குச் செல்ல தயாராக இருங்கள்´ என நிர்வாகிகளை உற்சாகப்படுத்துகிறார். அப்போது, தேர்தல் நேரத்தில் கட்சி நிர்வாகிகள் செய்த தவறுகளையும் சிலர் சுட்டிக் காட்டியுள்ளனர். அதனையும் கமல் குறிப்பெடுத்து வருகிறார். இந்தத் தேர்தலை அவர் மிகவும் எதிர்பார்த்தார். ஆனால், அது ஏமாற்றமாகிவிட்டது. `எங்கே தவறு செய்தோம்´, `தவறுக்குத் துணை போனவர்கள் யார்?´, `கூடுதல் சதவிகித வாக்குகளை வாங்கவிடாமல் செய்த காரணிகள் என்ன?´ என்பதுதான் கமலின் கேள்வியாக உள்ளது. அதையொட்டியே நிர்வாகிகளிடம் பேசி வருகிறார். இதன் தொடர்ச்சியாக, முதலில் மாநில அளவிலான நிர்வாகிகள் நியமனத்தில் சீரமைப்பை முன்னெடுக்க இருக்கிறார்” என்கின்றனர்.
`ம.நீ.மவுக்காக தேர்தல் பணிகளை முன்னெடுத்த சங்கையா சொல்யூசன்ஸ் மீது புகார் சொல்லப்பட்டதே?´ என்றோம். “ கமல் வசிக்கும் எல்டாம்ஸ் சாலை முகவரியில்தான் சங்கையா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அவர்களை ஒரு காரணமாக முன்வைக்கவும் தலைமை தயாராக இல்லை. தி.மு.க வெற்றி பெறாமல் போயிருந்தால் ஐபேக் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தியிருப்பார்கள். எனவே, சங்கையா சொல்யூசன்ஸ் குறித்துப் பேச வேண்டிய தேவை எழவில்லை. தற்போது கட்சியை வலுப்படுத்தும் வேலைகளில் கமல் ஆர்வம் காட்டி வருகிறார். ஊரடங்கு முடிந்ததும் ஏற்கெனவே ஒப்புக் கொண்ட திரைப்படங்களை நிறைவு செய்யும் முடிவிலும் இருக்கிறார்” என்கின்றனர்.
ம.நீ.மவில் நடக்கும் தேர்தல் தோல்வி ஆய்வுகள் குறித்து, அக்கட்சியின் தலைமை நிலைய பொதுச் செயலாளர் சந்தோஷ் பாபுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். “ நாங்கள் தேர்தலை சந்தித்தோம். இது மதிப்பீடு செய்யக் கூடிய நேரமாக உள்ளது. தேர்தல் நேரத்து தவறுகளை ஆராயவும் சிறந்த நிர்வாகிகளைக் கட்சிப் பதவிக்குக் கொண்டு வருவதும் முக்கிய நோக்கமாக உள்ளது. கட்சிப் பொறுப்புகளில் இருந்த சிலர் சரியாக தேர்தல் வேலை செய்யவில்லை எனக் கூறப்பட்டது. ஆனால், எந்தவிதப் பொறுப்புகளிலும் இல்லாதவர்கள் கடுமையாக தேர்தல் வேலை பார்த்துள்ளனர்.
அதுபோல, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதவர்களைக் கொண்டு வரும் முடிவில் தலைவர் இருக்கிறார். கட்சியை சீரமைப்பதற்கான வாய்ப்பாகத்தான் இதனைப் பார்க்கிறோம். தற்போது மக்கள் நீதி மய்யம் எப்படி செயல்படுகிறது? இன்னும் என்ன மாதிரியான பணிகளைச் செய்தால் மக்கள் மத்தியில் சிறப்பாக சென்று சேர முடியும் என்பதை ஆராய்ந்து செயல்படுவதற்கு புதிய நிர்வாகிகள் குழு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். அதனை விரைவில் தலைவர் முடிவெடுத்து அறிவிப்பார்” என்கிறார்.