புயல் பாதிப்புக்கு மத்தியில் நடனம் ஆடி அதன் புகைப்படங்கள், விடியோவைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட நடிகை தீபிகா சிங், ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.
அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகிய டவ்-தே, அதிதீவிர புயலாக மாறியது. புயல் காரணமாக கேரளம், கா்நாடகம், கோவா, மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களிலும் டாமன்-டையு மற்றும் தாத்ரா-நாகா் ஹவேலி யூனியன் பிரதேசத்திலும் கனமழையும் பலத்த காற்றும் வீசியது.
புயல் காரணமாக மகாராஷ்டிரத் தலைநகா் மும்பையில் கனமழை பெய்தது. மும்பை பகுதியில் திங்கள்கிழமை அதிகபட்சமாக மணிக்கு 102 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. அங்கு பலத்த மழையும் பெய்தது. புயல் காரணமாக மரங்கள் பல வேரோடு சாய்ந்தன. சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த மரங்களை அகற்றுவதற்கான பணிகளை தேசிய, மாநில பேரிடா் மீட்புக் குழுக்கள் மேற்கொண்டன.
2011 இல் ஹிந்தி தொலைக்காட்சித் தொடரில் நடிகையாக அறிமுகமான தீபிகா சிங், பல தொடர்களில் நடித்து புகழை அடைந்தார். 2014 இல் ரோஹித் ராஜ் கோயலைத் திருமணம் செய்தார். 2017 இல் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் மும்பையில் வீசிய புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே நடனம் ஆடி அதைப் புகைப்படங்கள், விடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார் தீபிகா சிங்.
கொரோனா, டவ்-தே புயல் ஆகியவற்றால் மும்பை நகரம் பலத்த பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில் இதுபோல சாலையில் நடனம் ஆடியதும் அதன் படங்களையும் விடியோவையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டதும் மிகப்பெரும் தவறு என ரசிகர்கள் பலரும் தீபிகா சிங்கின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.