ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவர், அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து, முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் அட்லீ. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.
இந்நிலையில், ஷாருக்கான் படத்தை முடித்த பின், பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைய உள்ளாராம் அட்லீ. ராஜா ராணி பட பாணியில் இப்படத்திற்கு அட்லீ கதை அமைத்துள்ளதாகவும், இந்தக் கதை ஜூனியர் என்.டி.ஆருக்கு மிகவும் பிடித்துப்போனதால், அவர் அதில் நடிக்க சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் இயக்குனர் அட்லீ, விரைவில் டோலிவுட்டில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.