சீனத்தில் மக்கள் தொகை என்னமோ அதிகம்தான், ஆனால், அங்கு குழந்தைகள் கடத்தலும் மிக அதிகம். 1997 ஆம் ஆண்டு, வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் காணாமல் போன நிலையில், அவனை 24 ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்த தந்தை இறுதியாக அதில் வெற்றி பெற்றுவிட்டார்.
சிறுவன் காணாமல் போன நிலையில், அவனைக் கடத்திச் சென்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனரே தவிர, சிறுவனை காவல்துறையினரால் மீட்க முடியவில்லை.
தனது மகனை தானே கண்டுபிடித்துத் தீருவது என்ற நம்பிக்கையோடு, ஒரு மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தனது தேடுதலைத் தொடங்கினார் குவோ காங்டாங். தனது மோட்டார் சைக்கிள் முன்பு, காணாமல் போனது தனது மகனின் புகைப்படங்களை ஒட்டிக் கொண்டு, நாடு முழுவதும் சுற்றி அலைந்தார்.
இப்படியே சுமார் கால் நூற்றாண்டுகள் ஓடிவிட்டது. இறுதியாக, அவர் தனது 26 வயது மகனைக் கண்டுபிடித்துவிட்டார். காவல்நிலையத்தில், காணாமல் போன மகனுடன் குடும்பத்தினர் இணையும் காட்சி படமாக்கப்பட்டது. இது சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு, செய்தி ஊடகங்களையும் எட்டிவிட்டது.
கடந்த 2015 ஆம் ஆண்டு இவரைப் பற்றிய படம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது.
என் மகனைத் தேடிக் கொண்டே சாலைகளில் பயணித்த போது, விபத்தில் சிக்கினேன். அப்போதுதான் நான் ஒரு தந்தை என்பதை உணர்ந்தேன் என்கிறார் அளவிலா மகிழ்ச்சியில்.
தமிழிலும், குழந்தைகள் கடத்தல் குறித்து மிக ஆழமாக எடுத்துரைக்கும் படமாக 6 என்ற படம் நடிகர் ஷாம் நடிப்பில் வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம்.