டீக்கடைகளுக்கும் மலையாளிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் டீக்கடை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் “சாய்வாலே´ என்ற டீ மற்றும் சிற்றுண்டி விற்கும் குழுமத்தில் நடிகை நயன்தாராவும், அவர் காதலர் விக்னேஷ் சிவனும் பெரிய முதலீடு செய்து இருக்கிறார்கள்.
ரவுடி பிக்சர்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சொந்த படம், பட விநியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் இந்த இருவரும், தற்போது புதிய தொழிலில் கால் பதித்து இருக்கிறார்கள்.
சென்னை, பெங்களூரில் நவீன டீக்கடையாக இருக்கும் சாய்வாலேவில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் முதலீடு செய்து இருப்பதை, இதன் நிறுவனர் விதுர் மகேஸ்வரி உறுதிப்படுத்தியுள்ளார். வணிக வளாகங்கள், மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் இருக்கும் சாய்வாலேவில் இணைய தளம் மூலமாகவும் டீ மற்றும் சிற்றுண்டிகளை வாங்கலாம் என்பது கூடுதல் தகவல்.
இன்னொரு மலையாள நடிகையான ராதா, மும்பை மற்றும் கேரளத்தில் ஹோட்டல் தொழிலில் கொடி கட்டி பறந்து வருகிறார். இது போல் நவ்யா நாயர், கோபிகா போன்ற மலையாள நடிகைகளும் ஹோட்டல் நடத்தி வருகிறார்கள். இந்தப் பட்டியலில் இப்போது நயன்தாரா இணைந்துள்ளார்.