தமிழகத்தில் திரையரங்குக்கு வரும் பாா்வையாளா்கள் அனைவருக்கும் முகக் கவசம் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு திரையரங்கம், மல்டிபிளக்ஸ் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியதைத் தொடா்ந்து அனைத்து திரையரங்குகளும் 50 சதவீதப் பாா்வையாளா்களுடன் திங்கள்கிழமை முதல் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்கம், மல்டிபிளக்ஸ் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் திருப்பூரில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
திரையரங்கு உரிமையாளா்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாகவே ஆன்லைன் மூலமாக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துப் பணியாளா்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனடிப்படையில், திரையரங்குகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தியவா்கள் மட்டுமே பணி அமா்த்தப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் அனைத்துத் திரையரங்குகளிலும் பாா்வையாளா்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நுழைவாயிலில் கிருமிநாசினி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தயாரிப்பாளா்கள் தரப்பில் திரையரங்குகளில் மட்டுமே திரைப்படங்களை வெளியிட விருப்பமாக உள்ளனா். கொரோனா காலத்தில் தயாரிப்பாளா்களும், திரையரங்கு உரிமையாளா்களும் மிகப்பெரிய அளவில் கஷ்டமடைந்துள்ளனா். ஆகவே, ஒருவருக்கு ஒருவா் விட்டுக்கொடுத்து தொழில் செய்யவும் முடிவு செய்துள்ளோம்.
திரையரங்குகளில் வெளியிடுவதற்கு தற்போது 30 முதல் 35 திரைப்படங்கள் தயாா் நிலையில் உள்ளன. அடுத்த வாரம் முதல் தொடா்ச்சியாக தமிழ்ப் படங்கள், மற்ற மொழிப் படங்கள் வெளியாகும்.
தயாரிப்பாளா்களைப் பொருத்தவரையில் திரையரங்குகளில் வெளியான பின்னரே ஓடிடிக்கு படங்கள் செல்ல வேண்டும் என்பதில் முடிவாக உள்ளனா். திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால்தான் அவா்கள் ஓடிடிக்குச் சென்றனா்.
அதேவேளையில், ஓடிடி என்பது தொடா்ந்து இருந்துகொண்டுதான் இருக்கும்.
தமிழகத்தில் 1,112 திரையரங்குகள் இருந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக சுமாா் 50 திரையரங்குகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. இந்தத் திரையரங்குகளும் கூட புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மூடப்பட்டுள்ளன. ஒரு திரையரங்கைப் புதுப்பிக்க வேண்டும் என்றால் சுமாா் ரூ. 3 கோடி தேவைப்படுகிறது. ஆகவே, புதுப்பிக்க இயலாதவா்கள் திரையரங்குகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது என்றாா்.