பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த மாதம் அமேசான் பிரைமில் வெளியான ´சார்பட்டா பரம்பரை´ படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த மாதம் 22 ஆம் தேதி அமெசான் பிரைம் விடியோவில் வெளியான படம் ´சார்பட்டா பரம்பரை´ திரைப்படம். இந்தப் படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கலைஞர் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இதுகுறித்து நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ´´சார்பட்டா பரம்பரை´ படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கலைஞர் தொலைக்காட்சி பெற்றுள்ளது.
என்னுடைய ´மதராசப்பட்டினம்´, ´பாஸ் என்கிற பாஸ்கரன்´ படங்களுக்குப் பிறகு எனது படம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி´´ என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து விரைவில் இந்தப் படம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ´சார்பட்டா பரம்பரை´ படத்தில் திமுக தொடர்பான கருத்துக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.