எப்படி நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு உணவையும் சரியான நேரத்தில் உட்கொண்டால், அந்த உணவின் முழு பலனையும் பெற முடியுமோ, அதேப் போல் தான் குடிக்கும் நீரையும் சரியான நேரத்தில் குடித்தால், நீரினால் கிடைக்கும் பலனைப் பெறலாம். உடல் ஆரோக்கியத்தில் நீர் மிகவும் இன்றியமையாதது. நம் உடலின் பெரும்பாலான பகுதி நீரால் நிரம்பியுள்ளது. அப்படிப்பட்ட நீரை ஒருவர் தினமும் போதுமான அளவில் குடிக்க வேண்டும். உடலில் நீரின் அளவு குறைவாக இருந்தால், அது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
நம்மில் பெரும்பாலானோர் நீரை இரவு நேரத்தில் குடிப்பதைத் தவிர்ப்போம். ஏனெனில் இரவு நீர் குடித்தால், நள்ளிரவில் சிறுநீர் கழிக்க எழ வேண்டியிருக்கும் என்பதால் தான். ஆனால் இரவு தூங்கும் முன் தண்ணீர் குடித்தால், நாம் அறிந்திராத பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். இக்கட்டுரையில் இரவு தூங்கும் முன் தண்ணீர் குடித்தால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இரவு தூங்கும் முன்பு தண்ணீர் குடிப்பது, இதயத்திற்கு மிகவும் நல்லது. எப்போதெல்லாம் இரவு தண்ணீர் குடிக்கிறோமோ, அப்போதெல்லாம் இதய நோயின் அபாயம் குறைகிறது. ஏனெனில் இது மென்மையான இரத்த ஓட்டத்திற்கு உதவி புரிந்து இதயத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகிறது. எப்போது உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கிறதோ, அது மாரடைப்பு போன்ற பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கும்.
மன அழுத்தம் அதிகமாக இருந்தால், அது தூக்கத்தைக் கெடுக்கும். இரவு தூங்குவதற்கு முன் ஒருவர் தண்ணீர் குடிப்பதால், அது நாள் முழுவதும் எதிர்கொண்ட அழுத்தத்தைப் போக்குவதோடு, இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.
இரவு தூங்கும் முன் தண்ணீர் குடிக்கும் போது, அது உடலில் புதிய செல்களை உருவாக்குவதோடு, தசைகளை வலிமையாக்கும். ஆகவே உங்கள் தசைகளை வலிமையாக்க நினைத்தால், இரவு தூங்கும் முன் தண்ணீர் குடியுங்கள்.
நீங்கள் உங்கள் வயிற்றை சுத்தம் செய்ய நினைத்தால், அதற்கான ஒரு சிறப்பான வழி தண்ணீர் குடிப்பது. தண்ணீரைக் குடிக்கும் போது நமது வயிறு சுத்தமாவதுடன், செரிமான மண்டலம் சிறப்பாக வேலை செய்யும். அதுவும் இரவு தூங்கும் முன் தண்ணீர் குடித்தால் வயிற்றில் உள்ள நச்சுக்கள் சிறப்பாக வெளியேற்றப்படும்.
பொதுவாக தண்ணீர் குடித்தால் உடல் அசதி நீங்கும். அதுவும் இரவு தூங்கும் முன் தண்ணீர் குடித்தால், நாள் முழுவதும் உழைத்ததால் ஏற்பட்ட களைப்பு நீங்கும். பகலில் நீங்கள் மன அழுத்தத்துடன் இருந்தால், அப்போது ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். இது மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கும்.