ஹஜ் எனப்படும் இஸ்லாத்தின் ஐந்தாவது புனிதக் கடமையை நிறைவேற்றும் யாத்திரை இன்று தொடங்கியது. மினா நகரில் 13 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் திரண்டுள்ளனர்.
கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத்து என்ற இஸ்லாத்தின் நான்கு தலையாய கடமைகளை நிறைவுச் செய்த முஸ்லிம்களில் பணவசதியும், உடல் பலமும் கொண்டவர்கள் ஹஜ் எனப்படும் புனிதக் கடமையை நிறைவேற்ற முஹம்மது நபியின் பிறந்த மண்ணான மக்காவுக்கு ஆண்டுதோறும் துல்ஹஜ் பிறையில் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை இன்று (22-ம்தேதி) தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 20 பேர் உள்ளிட்ட சுமார் 13 லட்சத்து 74 ஆயிரம் முஸ்லிம்கள் புனிதப் பயணம் மேற்கொண்டனர். இவர்கள் தனித்தனி குழுவாக மெக்கா, மதினா, அராபத் மலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று, சில சம்பிராதயங்களை நிறைவு செய்து இந்த யாத்திரையை நிறைவு செய்வார்கள்.
இந்நிலையில், சாத்தான் மீது கல்லெறியும் சடங்கு அராபத் மலை பகுதியில் நாளை துவங்கவுள்ளது. இதையொட்டி, மெக்கா நகரில் உள்ள மினாவை நோக்கி யாத்ரீகர்கள் கூட்டம், கூட்டமாக சென்று கொண்டுள்ளனர். அவர்கள் தங்கியிருக்க சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் தீ பிடிக்காத கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று இரவு முழுவதும் குர்ஆன் ஓதியபடி இங்கு தங்கியிருக்கும் யாத்ரீகர்கள், நாளை காலை அரபாத் மலைப்பகுதிக்கு சென்று அங்கு இருக்கும் ‘சாத்தான் தூண்’ எனப்படும் தூண்களின் மீது ஏழு கற்களை வீசி, தங்களது உள்ளத்தில் உள்ள ஏழு வகை தீய ஆசையை துறக்கும் வகையில் ஏழு கற்களை வீசுவார்கள்.
இந்த சம்பிரதாயம் நிறைவடைந்த பின்னர், இதர சம்பிரதாயங்களையும் நிறைவு செய்தபின்னர் (உள்நாட்டு தேதிப்படி) நாளை ஆடு மற்றும் ஒட்டகங்களை ‘குர்பானி’ என்னும் திருப்பலி கொடுத்த பின்னர், அன்று பிறந்த குழந்தையைப் போன்ற தூய்மையான மனநிறைவுடன் முஸ்லிம்கள் அனைவரும் தத்தமது சொந்த நாடுகளை சென்றடைவார்கள்.
ஹஜ் யாத்திரைக்கு வந்திருக்கும் மக்களை பாதுகாக்கும் பணியில் எலைட் தீவிரவாத தடுப்பு படையினர், போக்குவரத்து போலீசார், அவசர உதவி ராணுவப் படைகள், ராணுவ கூடுதல் படைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு சிறப்பு படையினர் என சுமார் ஒரு லட்சம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.